CBSE , ICSE பள்ளிகள் ‘ RTE இடஒதுக்கீடு’ வரையறைக்குள் வராது: தமிழக அரசு @ ஐகோர்ட்

 

CBSE , ICSE பள்ளிகள் ‘ RTE இடஒதுக்கீடு’ வரையறைக்குள் வராது: தமிழக அரசு @ ஐகோர்ட்

சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ் பாடத்திட்ட பள்ளிகள் கட்டாயக்கல்வி சட்ட இடஒதுக்கீடு வரையறைக்குள் வராது என்பதால் 25 சதவீத ஒதுக்கீடு வழங்கும்படி கோர முடியாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் போது பள்ளியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கவில்லை எனக்கூறி பள்ளி நிர்வாகங்கள் விண்ணப்பங்களை நிராகரித்து வருவதாகக்கூறி கோவையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கவில்லை எனக்கூறி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது தவறு. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றமே ஏற்கெனவே உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

ஆந்திராவிலும் இதுசம்பந்தமாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளையும் கொண்டு வர வேண்டும். இதுதொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்குத்தான் உள்ளது” என வாதிட்டார்.

அதற்கு பதிலளித்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு ப்ளீடர் எட்வின் பிரபாகர், “மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளுக்கு மாநில அரசின் கட்டண நிர்ணயக் குழு கட்டணங்களை நிர்ணயித்து, அதன் அடிப்படையில், 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது. ஆனால் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ் பள்ளிகளுக்கு மாநில அரசின் கல்வி கட்டண நிர்ணயக்குழு கட்டணங்களை நிர்ணயிக்க முடியாது என்பதால் இந்த பள்ளிகளை அந்த வரையறைக்குள் கொண்டுவர முடியாது.

எனவே 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இந்த பள்ளிகளில் சேர்க்கை வழங்க வேண்டும் எனக் கோர முடியாது. தமிழகத்தில் தற்போது ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு அரசு தொடக்கப் பள்ளியும், மூன்று கிலோ மீட்டர் இடைவெளியில் அரசு நடுநிலைப் பள்ளியும், தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் உள்ளனர் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 25 சதவீத ஒதுக்கீடு காரணமாக அரசுக்கு அதிக நிதிச்சுமை உள்ளது” என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 18-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

இந்த வழக்கு விஷயத்தில் உயர் நீதிமன்றம் விரிவான விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதை வரவேற்க வேண்டும். ஏன் என்று சொன்னால் தற்போதைய வாதத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள எந்த அறிக்கையும் உண்மை இல்லை. ஏதோ ஒப்புக்கு மேம்போக்காக சொல்லப்பட்ட விஷயமாக அது இருக்கிறது.

மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளுக்கு மாநில அரசின் கட்டண நிர்ணயக் குழு கட்டணங்களை நிர்ணயித்து, அதன் அடிப்படையில், 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது. ஆனால் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ் பள்ளிகளுக்கு மாநில அரசின் கல்வி கட்டண நிர்ணயக்குழு கட்டணங்களை நிர்ணயிக்க முடியாது என்பதால் இந்த பள்ளிகளை அந்த வரையறைக்குள் கொண்டுவர முடியாது.என்று கூறியுள்ளது. இது முற்றிலும் தவறான ஒன்று.

   தனியார்  மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தமிழக அரசின் கட்டண நிர்ணயக் குழு கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கிறது என்று சொன்னாலும் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்குவதில்லை. மாறாக தமிழக அரசு ஒரு கட்டணத்தை நிர்ணயித்து அதைத்தான் வழங்கி வருகிறது.

 அரசு நிர்ணயத்துள்ள கட்டணத்திற்கும், கட்டண நிர்ணயக்குழு தனியார் பள்ளிகளுக்கு வழங்கியிருக்கும் கட்டணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றது. 

 இந்த  கட்டண நிர்ணயக் குழுவை   தமிழக அரசும் மதிப்பதில்லை, தனியார் பள்ளிகளும் மதிப்பதில்லை. இந்தக் குழு நிர்ணயித்த கட்டணத்தை அரசும் கொடுப்பதில்லை தனியார் பள்ளிகளும் வாங்குவதில்லை.

RTE கல்வி கட்டணத்தை கொடுப்பதில் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தை  விட அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச கட்டணத்தை தான் கொடுத்து வருகிறார்கள். 

 எனவே இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்வது எங்கப்பன் குதிரைக்குள் இல்லை என்பது போல் உள்ளது. கட்டண நிர்ணயக் குழு கொடுத்த கட்டணத்தை நீங்கள் கொடுப்பதே இல்லை அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை தான் கொடுத்து வருகிறீர்கள். அப்படி இருக்கையில் நீங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வாதமே, பதில் மனு வே பொய் என்று ஆகிவிடுகிறது. 

எனவே கல்வி உரிமைச் சட்டத்தின் படி சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்சி பள்ளிகளையும் இந்த திட்டத்தில் சேர்ப்பதுதான் நியாயம்.

RTE 25 சதவீத இட ஒதுக்கீட்டினால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைகிறது, உபரி ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் தமிழக பள்ளிக்கல்வி துறையின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறதே தவிர மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க அரசு பள்ளிகள் தவறிவிட்டது என்பதைத்தான் சுட்டிக் காட்டுகின்றது.

 எனவே இனியும் மக்களையும் நீதிமன்றத்தையும் குழப்பாமல் உண்மையை நோக்கி பயணிக்க வேண்டிய சூழல் தமிழக அரசுக்கு உள்ளது.