RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
RTE admission 2025-26 Tamil Nadu : RTE மாணவர் சேர்க்கை, மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டிற்குப் பிறகு தொடங்குகிறது.
81,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் 2025-26 கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருந்து வந்தது. இதற்கு முக்கிய காரணமாக தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்காமல் இருந்தது.
இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ததையடுத்து மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் RTE சேர்க்கைக்கு 81,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் மாணவர் தேர்வு மற்றும் சேர்க்கை அக்டோபர் 30-31 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2025-26 கல்வியாண்டிற்காக, மாநிலம் முழுவதும் 7,717 பள்ளிகள் RTE அடிப்படையில் விண்ணப்பித்துள்ளன. மொத்தம் LKG வகுப்பில் 81,927 மாணவர்களும், முதல் வகுப்பில் 89 மாணவர்களும் RTE 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ளனர். இறுதி கட்டச் சேர்க்கை அட்டவணை பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது:
அக்டோபர் 30, 2025 : ஒதுக்கீட்டை விட விண்ணப்பங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் தகுதியுள்ள மாணவர்களின் சேர்க்கை நடைபெறும்.
அக்டோபர் 31, 2025: ஒதுக்கீட்டை விட விண்ணப்பங்கள் அதிகமானால் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையின் (Random Selection) மூலம் மாணவர் தேர்வு மற்றும் சேர்க்கை நடைமுறை பின்பற்றப்படும்.
இந்த நடவடிக்கை நிறைவடைந்த பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் RTE ஒதுக்கீட்டின் கீழ் EMIS தளத்தில் இணைக்கப்படுவர்; இதன் மூலம் அவர்கள் 2025-26 கல்வியாண்டிற்கான பெயர் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படுவார்கள்.
RTE சட்டத்தின் படி, அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் தொடக்க நிலை வகுப்புகளில் 25 சதவீத இடங்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இச்சேர்க்கை செயல்முறை, மாநில அரசின் ஆன்லைன் RTE தளத்தின் மூலம் மாணவர்கள் பயிலும் பள்ளி அளவில் வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது;
மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் இதனை மேற்பார்வை செய்கின்றன. ஆதரவற்றோர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர், மாற்றுப் பாலினத்தவர், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு குழந்தைக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமையை நிறைவேற்றுவதில் உறுதியுடன் இருப்பதையும், RTE 25% சேர்க்கை செயல்முறை மாநிலம் முழுவதும் வெளிப்படையாகவும் சமத்துவமானதாகவும் குழந்தை மையக் கொள்கைகளுடன் நிறைவேற்றப்படும் என்பதையம் மீண்டும் வலியறுத்துகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

