தனியார் பள்ளிகளுக்கு ஆன்லைன் வழியே அங்கீகாரம்....!!

 தனியார் பள்ளிகளுக்கு ஆன்லைன்   வழியே அங்கீகாரம்....!!

 தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் ஒழுங்கு படுத்தும் முறை இணைய முகப்பு வழியாக தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு துவக்க அனுமதி மற்றும் தொடர் அங்கீகாரம் மற்றும் இதர சேவைகளை ஆன்லைன் வழியே வழங்குவதற்காக இதற்கான இணைய முகவரியை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால் சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

 இதன் அடிப்படையில் இணைய வழியில் விண்ணப்பித்த பள்ளிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய பிரத்யோக மொபைல் ஆப் உருவாக்கப்பட்டு அதற்கான லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பித்த அனைவருக்கும் ஆன்லைன் வழியே அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பள்ளிகளுக்கு இணையம் வழியாக அங்கீகாரம் மற்றும் தரம் உயர்த்துதல் போன்ற சேவைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது சார்ந்து போதிய பயிற்சி வழங்க வேண்டி உள்ளதால் வரும் 26. 6. 2023 திங்கட்கிழமை காலை 10:30 மணி அளவில் தர்மபுரி காந்தி நகரில் உள்ள விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில்  தர்மபுரி மாவட்டத்தில் உள்ள  தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளியின் முதல்வர்கள் மற்றும் கணினி உபயோகிப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

 மேலும் எதிர்வரும் 01.07. 2023 முதல் அனைத்து வகையான தனியார் பள்ளிகளும்  இணையம் வாயிலாக மட்டுமே  விண்ணப்பித்து ஆணைகளை பெற வேண்டும் என்பதால் இப்பயிற்சியில் அனைத்து வகை தனியார்பள்ளிகளை சார்ந்தவர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர்  ரேணுகோபால்   அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.