கியான்வாபி மஸ்ஜிதை சீல் வைக்கும் வாரணாசி நீதிமன்ற உத்தரவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

 கியான்வாபி மஸ்ஜிதை சீல் வைக்கும் வாரணாசி நீதிமன்ற உத்தரவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

கியான்வாபி மஸ்ஜிதை சீல் வைக்கும் வாரணாசி நீதிமன்ற உத்தரவை கண்டித்து, ராமநாதபுரம்(கிழக்கு) மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

உ.பி. வாரணாசியில் அமைந்துள்ள பழமையான கியான்வாபி மசூதியில், தொழுகைக்காக இஸ்லாமியர்கள் ஒளு எனும் அங்கசுத்தி செய்யும் பகுதியில் சிவலிங்கம் இருப்பதாக, மசூதியில் கள ஆய்வு செய்ய கோரி மனுத்தாக்கல் செய்த இந்துத்துவ அமைப்பை சேர்ந்த ஒருவரின் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு, வாரணாசி நீதிமன்றம்  கியான்வாபி மசூதியின் ஒரு பகுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ அப்பட்டமாக மீறும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் எனவும், மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு துணை போகாமல் சட்டத்தின் ஆட்சியை ஒன்றிய, மாநில அரசுகள் நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் 17.5.2022 ( ராமநாதபுரம்(கிழக்கு) மாவட்டத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் ரியாஸ்கான் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர்கள் சோமு, சுலைமான் செயலாளர்கள் ஆசாத், நஜிமுதீன் பொருளாளர் ஹசன் அலி மற்றும் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் ஃப்ரண்டல் விங் நிர்வாகிகள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்டத் தலைவர் இப்ராஹீம் செயலாளர் தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரை நிகழ்த்திய எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீத் அவர்கள் கூறுகையில் “வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு  சட்டம் விதிகள்) 1991, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று நாட்டில் உள்ள வழிபாட்டு தலங்கள் எப்படி இருந்ததோ அது அப்படியே இருக்க வேண்டும் என்றும், அதில் மற்றொரு பிரிவினர் எந்த உருமாற்றமும் செய்யவும் தடை விதித்துள்ளது. மேலும், இந்த சட்டத்தின்படி வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நீதிமன்றம் மற்றும் அதிகார மையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் முறையீடுகள் அனைத்தும் கைவிடப்படுகிறது. ஆகையால் நாட்டில் உள்ள எந்த வழிபாட்டுத் தலங்களிலும் யாரும் தலையிட உரிமை கிடையாது. ஆனால், வழிபாட்டுத் தலங்கள் சிறப்புச் சட்டம், 1991, நடைமுறையில் இருந்தபோதிலும், கியான்வாபி மஸ்ஜித் தொடர்பான பாசிசவாதிகளின் வழக்கை வாரணாசி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று தற்போது விசாரணையின் ஒருபகுதியாக மஸ்ஜிதின் ஒருபகுதியை சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது.

!பாப்ரி மஸ்ஜீத் தூட்டி ஹை! காசி, மதுரா பாக்கி ஹை! (பாபர் மசூதி உடைந்தது! காசியிலும், மதுராவிலும் பாக்கி உள்ளது!)’ என்பது ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினரின் நீண்டகால கோஷமாக இருந்து வருகிறது. அயோத்தியில் பாபரி மஸ்ஜித் வீற்றிருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தங்களின் அடுத்த செயல்திட்டமான காசியின் கியான்வாபி மற்றும் மதுராவின் ஷாயி ஈத்கா ஆகிய மஸ்ஜித்களை குறிவைத்துள்ளன பாசிச சக்திகள்.

பாபரி மஸ்ஜிதை அழித்த அதே முறைதான் கியான் வாபி மஸ்ஜித் விஷயத்திலும் பின்பற்றப்படுகிறது. அந்நிய மதங்களையும் அவற்றின் அடையாளங்களையும் இடிப்பதும், அழிப்பதும் இந்துத்துவ ராஷ்டிராவை நோக்கிய சங்பரிவார்கள் பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும். 

நாட்டில் உள்ள எந்த வழிபாட்டுத் தலங்களிலும் யாரும் தலையிட உரிமை கிடையாது என்று வழிபாட்டு இடங்கள் மீதான உரிமைகள் பற்றிய விளக்கங்கள் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆதாரமற்ற அல்லது சட்டத்திற்கு புறம்பான வழியில் கியான்வாபி மஸ்ஜித் மீதான சர்ச்சைகளை மதவாத சக்திகள் உண்டாக்குகின்றனர். இந்த மோசமான சதித்திட்டம் நாட்டில் பேரழிவு மற்றும் அமைதியின்மைக்கு வழிவகுக்கும். இது நாட்டின் கண்ணியத்திற்கும் மற்றும் மதிப்பிற்கும் தீங்கு விளைவிக்கும்.

ஆகவே,  நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் இதுபோன்ற எந்தவொரு செயலையும் குடிமக்கள் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்கும் வாரணாசி நீதிமன்றத்தின் ‘வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ அப்பட்டமாக மீறும்’ உத்தரவை உச்சநீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் மேலும், பாசிச சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு துணை போகாமல் சட்டத்தின் ஆட்சியை ஒன்றிய, மாநில அரசுகள் நிலைநிறுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்கள். 

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அரூஸி கண்டன உரையாற்றினார். மற்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, தொகுதி, நகர் நிர்வாகிகள் செயல்வீரர்கள், ஜமாத்தார்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு