தமிழகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம்: வசமாக சிக்கிய அதிகாரி

தமிழகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம்: வசமாக சிக்கிய அதிகாரி

திருச்சி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக இருப்பவர் சரவணக்குமார். இவர் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். இவரது காரில் கட்டு கட்டாக பணம் எடுத்து செல்லப்படுவதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி தேவநாதன் தலைமையிலான போலீசார் பிற்பகல் 3 மணி அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் அருகே சரவணகுமார் சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். 

அப்போது பைகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.40 லட்சம் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சரவணகுமாரையும், அவரது கார் ஓட்டுநர் குளித்தலையை சேர்ந்த மணியையும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும், சரவணகுமார் பயணம் செய்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். எதற்காக இவ்வளவு பெரிய தொகையை  எடுத்துச் சென்றார்? இந்த பணம் யாருடையது? எதற்காக இந்த பணம் சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது? என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு அதிகாரி ஒருவரின் வாகனத்தில் இருந்து சுமார் ரூ.40 லட்சம் ரூபாய் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.