தமிழக மக்களுக்கு பட்டை நாமம்;அரசு ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு, பொங்கல் பரிசு!

தமிழக மக்களுக்கு பட்டை நாமம்;அரசு ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு, பொங்கல் பரிசு!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தி கடந்த ஜூலை மாதம் முதல் வழங்கியது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார். அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், தமிழகத்தின் நிதிநிலை சீரானதும், அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

இந்நிலையில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு டபுள் ட்ரீட்டாக முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வோடு அரசு ஊழியர்களுக்குப் பொங்கல் பரிசையும் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழக அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14% உயர்த்தி 1-1-2022 முதல் 17சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டு ஒன்றுக்குத் தோராயமாக 8,724 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பொங்கல் பரிசாக ‘C’ மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு ரூபாய் 3 ஆயிரமும், ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கிடவும், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்குப் பொங்கல் பரிசாக 1000 ரூபாயும், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாயும் வழங்கிடவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்

இதன் காரணமாக, அரசுக்குத் தோராயமாக 169.56 கோடி ரூபாய் அளவிற்குச் செலவினம் ஏற்படும் என்றும் நிதிச்சுமை உள்ள போதிலும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சியில் மக்களுக்கு ஒன்றும் வழங்காமல் ஒரு வேலையும் செய்யாமல் மக்களை ஏமாற்றி க்கொண்டு இருக்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு வழங்கி இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.