அதிமுக: தேர்தலுக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு -வேட்பு மனு கேட்டவர் விரட்டியடிப்பு!

 அதிமுக: தேர்தலுக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு -வேட்பு மனு கேட்டவர் விரட்டியடிப்பு!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு வரும் டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடக்கும் என்றும், அதற்கான வேட்பு மனுக்கள் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் வழங்கப்படுமென்றும் டிசம்பர் 2 ஆம் தேதி அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 3) பகல் அதிமுக தலைமைக் கழகத்துக்கு வந்த சென்னையைச் சேர்ந்த தொண்டர் ஓமப்பொடி பிரசாத் என்பவர் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான மனுவை கேட்டார். ஆனால் நிர்வாகிகள் அவருக்கு வேட்பு மனுவை கொடுக்க மறுத்தனர். ஏன் என்று அவர் அதிமுக நிர்வாகிகளுடன் விவாதம் செய்தார். ‘உனக்கு மனு கெடையாது போ’என்று நிர்வாகிகள் கூறினர்.

இதையடுத்து தலைமைக் கழக வளாகத்திலேயே செய்தியாளர்களை அழைத்த ஓமப்பொடி பிரசாத், “ தேர்தலில் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தால் தேர்தலில் போட்டியிடலாம் என்று தெரிவித்திருந்தார்கள். ஆனால் கட்சியின் அடிப்படை உறுப்பினரான எனக்கு இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு வழங்க மறுக்கிறார்கள்”என்று பன்னீரையும், எடப்பாடியையும் பற்றி பேட்டி கொடுத்தபோதே அதிமுக நிர்வாகிகள் சிலர் அவரை சூழ்ந்துகொண்டு விரட்டினர். சிலர் அவரைத் தாக்கவும் முயல அவர் அங்கிருந்து சென்று ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அதிமுக தலைமை மீது புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே, ‘ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட விரும்புவர் கட்சியில் 5 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும். அதற்கான சான்றளிக்க வேண்டும். மேலும் முன்மொழிபவர், வழிமொழிபவர் விவரங்களைக் கொடுக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் கொடுக்காததால் அவருக்கு வேட்பு மனு வழங்கப்படவில்லை’ என்று அதிமுக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபக்கம் இருக்க அதிமுகவின் அமைப்புத் தேர்தல் கட்சியின் சட்ட விதிகளை மீறி நடத்தப்படுகிறது, எனவே தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கே.சி. பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு இன்று பிற்பகல் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘கே.சி.பழனிசாமி இந்த மனுவைத் தொடர தகுதியில்லாதவர். அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்”என்று அதிமுக வழக்கறிஞர் கூறினார். ஆனால் கே.சி.பழனிசாமி வழக்கறிஞரோ, தான் அதிமுக உறுப்பினர்தான் என்றும் தன்னோடு அதிமுகவின் பல அடிப்படை உறுப்பினர்களும் இந்த வழக்கில் இணைய உள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார். மேலும் எந்த முன்னறிவுப்பும் இல்லாமல் அதிமுகவின் சட்ட விதிகளை மீறி தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதை தடை செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

ஆனால் நீதிபதி அப்துல் குத்தூஸ் அதிமுக அமைப்புத் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து அதிமுக தலைமை மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், ‘இந்தத் தேர்தலில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டால்... தேர்தலை ரத்து செய்யக் கூட நீதிமன்றம் தயங்காது” என்றும் குறிப்பிட்டார்.