விரைவில் PTR தியாகராஜனுக்கு தமிழக அமைச்சரவையிலிருந்து கல்தா...?!

விரைவில் PTR தியாகராஜனுக்கு தமிழக அமைச்சரவையிலிருந்து கல்தா...?!


தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டுக் கொண்டிருந்த போது, அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் கைகோர்த்தார். அப்போது திமுகவின் ஐடி விங்கை கவனித்து வந்தவர் பழனிவேல் தியாகராஜன். இவருக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் இடையில் பல்வேறு விஷயங்களில் மோதல் வெடித்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக ஐபேக் நிறுவனம் வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால் இந்த விஷயத்தில் மு.க.ஸ்டாலின் விடாப்பிடியாக இருந்தார். ஒருவழியாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. இந்த சூழலில் பழனிவேல் தியாகராஜனுக்கு நிதியமைச்சர் என்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த துறையை ஸ்டாலின் அளித்தார். துறை சார்ந்த அனுபவம் இருப்பினும், அரசியலில் ஜூனியர் என்பதால் இவருக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு வேண்டாம் என்று சீனியர்கள் பலரும் வலியுறுத்தியதாக தெரிகிறது.


இருப்பினும் ஸ்டாலின் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இந்த சூழலில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செயல்பாடுகளும், பேச்சும் தொடர் சர்ச்சைகளுக்கு வித்திட்டு வருகின்றன. முதல் ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்து கொண்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்த கவுன்சிலின் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற நடைமுறையை ஏற்க முடியாது. மாநிலத்தின் மக்கள்தொகை, பொருளாதாரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வாக்கு அளிக்கப்பட வேண்டும் என்றார்.


அதற்கு பல்வேறு மாநிலங்களும் கடும் எதிர்ப்பை காட்ட அமைச்சர் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். இதனால் பழனிவேல் தியாகராஜன் மீது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்முறை அதிருப்தி ஏற்பட்டது. நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது கடும் விமர்சனங்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்வைத்திருந்தார். அதாவது, பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது.


வாய்க்கு வந்ததை எல்லாம் உளறக்கூடிய நபர். அவரது கேள்விகளுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என்று கூறினார். இந்த விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலிக்க, அதிமுக - திமுக இடையில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, நிதியமைச்சர் தன்னை மட்டும் பொருளாதார நிபுணர் என்று நினைத்து கொண்டிருக்கிறார். மற்றவர்களை எல்லாம் மிகவும் அவமானப்படுத்துவதாக குறிப்பிட்டார்.


அதற்கு பழனிவேல் தியாகராஜன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்த சூழலில் தான் அரசு ஊழியர்களை கோபமடையச் செய்யும் வகையில் அமைச்சர் சமீபத்தில் நடந்து கொண்டுள்ளார். இதனை ஜாக்டோ ஜியோ அமைப்பினரே பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர். அதாவது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை நிதியமைச்சர் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அரசு ஊழியர்கள் மீது மக்கள் மத்தியில் பகைமையை வளர்க்கும் வகையில் பேசியுள்ளார்.


இது அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையிலான நல்லுறவில் விரிசல் ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்த விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். திமுகவிற்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையிலான நல்லுறவு நீண்ட காலமாக நீடித்து வரும் ஒன்று. இந்த விஷயத்தில் கைவைத்தது முதல்வருக்கு சற்று தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.



ஏனெனில் அரசியல் அரங்கில் நியாயமான விஷயம் என்றால் கூட ஆளுங்கட்சி அதனை நயமாகத் தான் செய்ய வேண்டும். இல்லையெனில் அது பெரும் தலைவலியாக மாறி தொல்லை கொடுக்கும் என்கின்றனர் அரசியல் விவரம் தெரிந்தவர்கள். இவ்வாறு தொடர் சர்ச்சைகளுக்கு வித்திட்டு வரும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை வேறு துறைக்கு மாற்றி விடலாமா என்று திமுக தலைமை யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றவுடன் முடிவு எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.