மு.க.அழகிரியின் ஆதரவாளர் மதுரையைச் சேர்ந்த ஜீவா நகர் முருகன், “இந்த தேர்தலில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டாம்” என்று கூறியதாக ஆடியோ வெளியிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களிடம் உதயசூரியனுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று கூறியதாக அவருடைய ஆதரவாளர் ஜீவா நகர் முருகன் பேசிய வீடியோ திமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி, இவர் காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக பதவி வகித்தார். அதற்குப் பிறகு, திமுகவில், மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக, கருணாநிதி உயிருடன் இருந்தபோதே மு.க.அழகிரி திமுகவில் இருந்து விலக்கப்பட்டார்.
கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் சேர்க்கபடுவார் என்ற நம்பிக்கை அவருக்கும் அவருடைய ஆதாரவாளர்கள் மத்தியிலும் முற்றிலும் மறைந்துபோனது.
இந்த சூழலில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்றும் அரசியல் கட்சி தொடங்குவேன் என்றும் அறிவித்ததைத் தொடர்ந்து, மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்கி ரஜினிகாந்த் உடன் இணைவார் என்று பேசப்பட்டது. ஆனால், ரஜினிகாந்த் தனது உடல்நிலை காரணமாக அரசியலில் ஈடுபடவில்லை என்று தனது முடிவை மாற்றிக்கொள்வதாக அறிவித்தார். இதனால், மு.க.அழகிரி அரசியல் திட்டம் காணல் நீரானது.
இதனைத் தொடர்ந்து, மு.க.அழகிரி தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை மதுரையில் கூட்டினார். இதில் அவருடைய ஆயிரக்க கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
இதனிடையே, மு.க.ஸ்டாலின் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மு.க.அழகிரி பற்றி கேள்வி எழுப்பியபோது, அவர் எனது அண்ணன் என்று குறிப்பிட்டார். இதனால், தமிழக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் இருவருக்கும் இடையேயான விரிசல் மேலும் அதிகரிக்காது. என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், மு.க.அழகிரியின் ஆதரவாளர் மதுரையைச் சேர்ந்த ஜீவா நகர் முருகன், “இந்த தேர்தலில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டாம்” என்று கூறியதாக ஆடியோ வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மு.க.அழகிரி ஆதரவாளர் ஜீவா நகர் முருகன் வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது: “வணக்கம், நான் ஜீவா நகர் முருகன் பேசுகிறேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அண்ணன் (மு.க.அழகிரி) வீட்டில் இருந்து தகவல் வந்தது. உதயசூரியன் சின்னத்திற்கு யாரும் ஓட்டு போட வேண்டாம் என்ரு நமது ஆதரவாளர்கள், நமது ஆதரவாளர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரிடமும் சொல்லுங்கள். இந்தமுறை உதயசூரியன் வரக்கூடாது.” என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த ஜீவா நகர் முருகன் என்பவர் மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர் ஆவர். அவர், மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களிடம் இந்த தேர்தலில் உதய சூரியனுக்கு வாக்களிக்கக் கூடாது என்று தெரிவித்ததாகக் கூறியிருக்கிறார். ஜீவா முருகன் கூறியதை அரசியல் தளத்தில் பலரும் மு.க.அழகிரியின் குரலாகவே கருதுகின்றனர்.