மு.க. அழகிரி இடத்தை நோக்கி நகருகிறாரா கனிமொழி... ?
திமுகவின் தென் மண்டல தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சியின் லோக்சபா எம்.பி. கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். தென்மண்ட அமைப்பு செயலாளராக மு.க. அழகிரி வகித்த இடத்தை நோக்கி கனிமொழி நகர்ந்து கொண்டிருப்பதாகவே இது பார்க்கப்படுகிறது.
திமுகவில் ராஜ்யசபா எம்.பி. பதவி பெற்று கனிமொழி அரசியலுக்குள் நுழைந்தார். ஆனால் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு மக்கள் அளித்த வாக்குகளால் வெற்றி பெற்று எம்.பி.யானார்.
திமுகவின் மாநில மகளிர் அணி செயலாளராகவும் இருந்து வருகிறார் கனிமொழி. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் பணிகளை கவனிக்க மண்டல பொறுப்பாளர்கள் திமுகவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென்மண்டல தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். திமுகவின் தென்மாவட்டங்கள் மெல்ல மெல்ல கனிமொழி கட்டுப்பாட்டில் வந்து கொண்டிருக்கின்றன என்பதை இது காட்டுவதாகவே தெரிகிறது. இது தொடர்பாக திமுக நிர்வாகிகளிடம் நாம் பேசிய போது, மு.க. அழகிரி தனிக் கட்சி தொடங்கும் நிலையை தவிர்க்க திமுக தலைமை தீவிரமாக முயன்றது.
இப்போது மு.க. அழகிரி மவுனம் காத்து வருகிறார். இந்த மவுனம் தொடர்ந்து நீடிக்கும் என்றே எதிர்பார்க்கிறது கட்சி தலைமை. மு.க. அழகிரிக்கும் திமுக தலைமைக்குமான சமரசம் என்பது கருணாநிதி குடும்பத்துக்குள்ளான ஒரு நிகழ்வு. அதேநேரத்தில் கனிமொழிக்கான அடுத்தடுத்த முக்கியத்துவம் கிடைத்து வருவதையும் இது வெளிப்படுத்துகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதும் கூட என்கின்றனர்.
மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டில்தான் தென் மாவட்ட திமுக இருந்தது. திமுக தென்மண்டல அமைப்பு செயலாளராக அழகிரி பதவி வகித்தார். அவருக்குப் பின்னர் திண்டுக்கல் ஐ. பெரியசாமிக்கு இந்த பதவி கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் அவர் திமுக துணைப் பொதுச்செயலாளராக்கப்பட்டார். தற்போது கனிமொழிக்கு தென்மண்டல தேர்தல் பொறுப்பாளர் பதவி என்பது அழகிரி வகித்த இடத்தை நோக்கிய நகர்வுதான் என்பதாவே பார்க்கிறோம் என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.