தமிழகத்தை விட்டு கிளம்பும் ரஜினி; உண்மையா?

தமிழகத்தை விட்டு கிளம்பும் ரஜினி;  உண்மையா?

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் ரஜினியின் அரசியல் வருகை சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. தனது படங்கள் வாயிலாக பல்வேறு யூகங்களை வெளிப்படுத்தி வந்த ரஜினி, 2017ஆம் ஆண்டு அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார். அதன்பிறகு ரஜினி மக்கள் மன்ற வேலைகள் சூடுபிடிக்கத் தொடங்கின. பூத் கமிட்டி அமைப்பது முதல் கட்சிக்கான நிர்வாகிகள் நியமனம் வரை தீவிரம் காட்டினர்.

திரை மறைவில் பாஜக


அவ்வப்போது மாவட்ட செயலாளர்களுடன் சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில் தமிழகத்தில் கால்தடம் பதிக்க ரஜினி மூலம் காய் நகர்த்த பாஜக திரை மறைவில் சில வேலைகளைச் செய்தன. இந்த இருதரப்பிற்கும் இடையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தகவல்தொடர்பு அதிகாரியாக பணியாற்றும் அளவிற்கு நிலைமை சென்றது.

பின் வாங்கிய ரஜினி

ரஜினி கட்சி தொடங்கினால் அவருடன் கூட்டணி அமைத்து அதிமுகவிற்கு டாடா காட்டி விடலாம் என்று பாஜக எண்ணியது. இதன் காரணமாகவே அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை நாங்கள் ஏற்க மாட்டோம். பாஜக மேலிடம் தான் முடிவு செய்து அறிவிக்கும் என்று தமிழக பாஜகவினர் கொளுத்தி போட்டனர். ஆனால் பாஜகவிற்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் ரஜினி கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்துவிட்டார்.

ஏன் இந்த முடிவு?

இதற்கு அவர் முன்வைக்கும் காரணம் தனது உடல்நிலை. ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து ரஜினிக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படுகிறது. இதனால் முடிந்தவரை நோய்த் தொற்றுக்கு ஆளாகாமல் தவிர்ப்பது அவசியம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதுபற்றி நன்கு அறிந்தும் 2017ல் ஏன் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று ரஜினி அறிவித்தார் என்பது தான் பலரது கேள்வி.

ரசிகர்கள் கனவு கலைந்தது

அதுவும் உயிரைப் போனாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு, தனக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் அது பிறரையும் பாதிக்கும் என்று காரணத்தை முன்வைப்பது மிகவும் தாமதமான முடிவு. இதுபற்றி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த போதே ரசிகர்களிடம் தனது முடிவை தெளிவாகத் தெரிவித்திருக்க வேண்டும். இத்தனை நாட்கள் அவர்களை கனவு காணச் செய்திருக்க வேண்டாம் என்று கூறுகின்றனர்.

ரத்த அழுத்த மாறுபாடு

இவரது முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட காரணமாக அமைந்தது ஐதராபாத்தில் நடந்த ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது தான். இதில் ரஜினிக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்பது மிகவும் ஆறுதலான விஷயம். ஆனால் ரத்த அழுத்த மாறுபாடு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. உடனே ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

திமுகவின் மாஸ்டர் பிளான்?

அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்த நிலையில், உடல் சீராகி பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து நேரே சென்னை திரும்பிய ரஜினி, ராகவேந்திரா மண்டபத்தில் தமிழருவி மணியன், அர்ஜுனமூர்த்தியுடன் அவசர ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அதன்பின்னர் தான் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதற்கிடையில் ரஜினி கட்சி தொடங்காமல் பின் வாங்கியதற்கு அண்ணாத்த படத்தின் தயாரிப்பாளரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவருமான கலாநிதி மாறன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மேல் சிகிச்சை அவசியம்

இந்த சூழலில் எஞ்சியிருக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை ரஜினி முடித்துக் கொடுக்க வேண்டும். இதற்கான வேலைகள் பிப்ரவரி மாத இறுதியில் சென்னையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் ரஜினி தனக்கு உடனடியாக மேல் சிகிச்சை வேண்டும் என்று உணர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அமெரிக்காவா? சிங்கப்பூரா?

ஆனால் உலக நாடுகளில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. இந்த சூழலில் வெளிநாட்டு பயணம் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. அதேசமயம் அமெரிக்காவிற்கு பதில் சிங்கப்பூர் சென்று மேல் சிகிச்சை பெற்று திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. எப்படியும் நடிகர் ரஜினி நலம் பெற்று திரும்பினால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைவர் என்பதில் சந்தேகமில்லை.