பாக்யராஜ்.. அதிமுகவில் மீண்டும் இணைகிறாரா.....?. பிரச்சாரத்துக்காக படை திரட்டப்படும் நட்சத்திர பட்டாளம்.!
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் மீண்டும் அதிமுகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆரின். கலை உலக வாரிசாக கருதப்படும் பாக்யராஜ் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சில ஆண்டுகள் இருந்தார். இதனிடையே அங்கேயிருந்து விலகி இப்போது அரசியல் பார்வையாளராக மட்டும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவரை மீண்டும் அதிமுகவுக்கு அழைத்து வருவதற்கான அசைன்மெண்ட் கையில் எடுக்கப்பட்டுள்ளது.
திரைக்கதை மன்னன் என அழைக்கப்படும் கே.பாக்யராஜ், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஆவார். அவரது திரைப்படங்களில் வரும் சண்டைக்காட்சிகளில் இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்கும் சுவர் விளம்பரங்களை பலரும் பார்த்திருக்கக் கூடும். அந்தளவு எம்.ஜி.ஆர். மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்ட கே.பாக்யராஜ் அவரது கலை உலக வாரிசாகவும் அறியப்படுகிறார்.
அதிமுகவுக்காக கடந்த கால தேர்தல்களில் பரப்புரை செய்த பாக்யராஜ் கட்சி ரீதியாக எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை. இதனிடையே ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் கருணாநிதி முன்னிலையில் இணைந்தார். அதைத் தொடர்ந்து திமுகவுக்கு ஓட்டுக் கேட்டு பிரச்சார பயணங்களை மேற்கொண்டார். நாளடைவில் அங்கிருந்தும் ஒதுங்கி இப்போது எந்த இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் அமைதி காத்து வருகிறார்.
இந்நிலையில் அவரை மீண்டும் அதிமுகவுக்கு அழைத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பாக்யராஜின் வருகை மூலம் பிரச்சாரத்தில் பயன் கிடைக்கும் என நம்புகிறது அதிமுக தலைமை. ஏனெனில் இவரளவுக்கு எம்.ஜி.ஆரை பற்றி பொதுமக்கள் மத்தியில் வேறு யாரும் சிலாகித்து பேச முடியாது. மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆரை நினைவுகூற வைக்கும் திறமை பாக்யராஜுக்கு உண்டு.
இதனால் அவருக்கு அழைப்புவிடுத்து இணைப்பை எதிர்பார்க்கிறது அதிமுக தலைமை. ஆனால் பாக்யராஜ் தரப்பில் இன்னும் உறுதியான பதில் எதுவும் தரப்படவில்லை. காரணம் பாக்யராஜ் மீண்டும் கட்சியில் இணைந்து பிரச்சாரத்துக்கு செல்வது அவரது குடும்ப உறுபினர்களுக்கு விருப்பம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.