லோக்சபாவில் எதிரொலித்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: பா.ஜ., எம்.பி.,க்கள் 'வெட்கக்கேடு' என முழக்கம்

 லோக்சபாவில் எதிரொலித்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: பா.ஜ., எம்.பி.,க்கள் 'வெட்கக்கேடு' என முழக்கம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பற்றி எதிர்க்கட்சிகள் எழுந்து நின்று விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ஜ., எம்.பி., அனுராக் தாக்கூர் லோக்சபாவில் வலியுறுத்தினார். பா.ஜ., எம்.பி.,க்கள் 'வெட்கக்கேடு.. வெட்கக்கேடு..' என முழக்கமிட்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் லோக்சபாவில் நடைபெற்றது. அப்போது பா.ஜ., எம்.பி., அனுராக் தாக்கூர், ஆளும்கட்சியின் பல்வேறு சாதனைகளை பற்றியும், எதிர்க்கட்சிகளின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் பேசினார். அவர் பேசியதாவது: தேர்தல் முடிவு வெளியான ஜூன் 4ல் இருந்து 99 இடங்களை பெற்ற கட்சி, 240 இடங்களை விட அதிகம் வெற்றிப்பெற்றது போல் சித்தரிக்க முயற்சிக்கிறது. பிரதமர் மோடியின் ஆட்சியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது; ஆனால் எதிர்க்கட்சியை சேர்ந்த உதயநிதி சனாதன தர்மத்தை இழிவுப்படுத்துகிறார். இவ்வாறு அனுராக் தாக்கூர் பேசினார்.

அனுராக் தாக்கூரின் இந்த பேச்சுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது குறுக்கிட்டு பேசிய திமுக எம்.பி., தயாநிதி, ''சனாதன விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. லோக்சபா விதி எண் 352ன் படி, அனுராக் தாக்கூரின் கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்தார்.


இதற்கு பதிலளித்த லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ''அப்படியென்றால் நீங்கள் (எதிர்க்கட்சியினர்) அனைவரும் விதி எண் 352ன்கீழ் பேச தயாராக இருக்க வேண்டும். நீட் விவகாரம் கூட நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதுபற்றி லோக்சபாவில் ஏன் பேசுகிறீர்கள்?'' எனக் கேள்வி எழுப்பினார்.

பின்னர் பேசிய அனுராக் தாக்கூர், ''தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து எதிர்க்கட்சிகள் எழுந்து நின்று விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றார். அப்போது, 'வெட்கக்கேடு.. வெட்கக்கேடு..' என ஆளும் பா.ஜ., எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.