சிஏஏ என்றால் என்ன.....? அதன் விதிகள் என்ன...??

 சிஏஏ என்றால் என்ன.....? அதன் விதிகள் என்ன...??

1955 குடியுரிமை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு மத்திய அரசு கடந்த 2019இல் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சிஏஏ என்றால் என்ன.. இதில் யாருக்குக் குடியுரிமை கிடைக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

 இந்த சட்டத்தின் கீழ் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014 டிசம்பர் 31ஆம் தேதி அல்லது அதற்கு முன் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சிகளுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்வதே இந்த சிஏஏ சட்டமாகும். அந்த நாடுகளில் மத சிறுபான்மையினராக உள்ளவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதே இதன் நோக்கம்.

இந்த சட்டம் மூலம் மத துன்புறுத்தல் காரணமாக அந்த நாடுகளில் இருந்தோர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால், இந்தியாவுக்கு வந்தவர்கள் 5+ 1 என்று 6 ஆண்டுகள் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும். அதாவது தொடர்ச்சியாக கடந்த ஒரு வருடமும், கடந்த 14 வருடங்களில் குறைந்தது ஐந்து வருடங்களும் இந்தியாவில் வசித்து இருக்க வேண்டும். இதற்கு முன்பு புலம்பெயர்ந்தோர் தொடர்ச்சியாக 11 ஆண்டுகளாக இருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும் என்ற விதி இருந்தது. அதை இந்த புதிய சட்டத்தில் குறைத்து இருந்தனர்.

அதேநேரம் அசாமின் கர்பி ஆங்லாங், மேகாலயாவின் கரோ மலைகள், மிசோரமில் உள்ள சக்மா மாவட்டம் மற்றும் திரிபுராவில் உள்ள பழங்குடியினர் பகுதிகள் உட்பட, அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் உள்ள அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் பழங்குடிப் பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு இந்தச் சட்டம் விலக்கு அளிக்கிறது. அதேபோல இலங்கையில் இருந்து வந்து தமிழகத்தில் அகதிகளாக உள்ளவர்களுக்கும் இது பொருந்தாது.

கடந்த 2019 டிசம்பரில் இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் இந்தச் சட்டத்திற்குக் கிடைத்தது. அதன் பிறகு நாடு முழுவதும் இந்தச் சட்டத்திற்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்தது. இந்தப் போராட்டங்கள் பல வாரங்கள் வரை கூட நீட்டித்தது. இறுதியில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் தான் போராட்டங்கள் முடிவுக்கு வந்தது.

அதன் பிறகு இத்தனை ஆண்டுகளில் இந்த சிஏஏ சட்டம் குறித்து மத்திய அரசு எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களாக மீண்டும் இந்த சிஏஏ குறித்த பேச்சு இருந்தது. இருப்பினும், லோக்சபா தேர்தலுக்குள் இந்த சிஏஏ விதிகள் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிப் பல மூத்த பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். இந்தச் சூழலில் தான் இந்த அறிவிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது.

 அச்சம் காரணமாக மற்ற நாடுகளில் இருந்து வருவோருக்குக் குடியுரிமை வழங்குவதாக இருந்தால் அனைவருக்கும் வழங்கலாமே.. அது இஸ்லாமியர்களை மட்டும் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும், இந்தச் சட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வருவோருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அங்கே இஸ்லாமியர்கள் தான் பெரும்பான்மையாக இருப்பதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.