அதிமுக கொடி, சின்னத்தை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை தொடரும்.....

அதிமுக கொடி, சின்னத்தை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை தொடரும்.....

 அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு விதித்த தடை செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு விதித்த இடைக்கால தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அ.தி.மு.க. பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்க கோரி எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி சதிஷ்குமார் முன்பு நடைபெற்றது. அப்போது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் அதே பதவியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருகிறார் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. அதிமுக சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், அதிமுக சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை தொடரும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.