பர்கூர் எம்.எல்.ஏ. D. மதியழகனுக்கு மந்திரியாகும் வாய்ப்பு...!?

பர்கூர் எம்.எல்.ஏ. D.  மதியழகனுக்கு மந்திரியாகும் வாய்ப்பு...!?

வரும் மே 7 ஆம் தேதியுடன், முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஆட்சியமைத்து 2 ஆண்டுகள் நிறைவடைந்து 3 வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்படுவது மட்டுமின்றி, புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்றும், சிலர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அமைச்சர்களின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து இந்த நீக்கம் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதில் குறிப்பாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு வேறு ஒருவரை அவருக்கு பதிலாக அமைச்சராக நியமிக்க அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சராக இருக்கும் நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து சட்டசபைக்கு தேர்வான அமைச்சர் கா.ராமச்சந்திரனும் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் இதற்கு முன்பாக தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக இருந்த நிலையில், சுற்றுலா துறைக்கு மாற்றம் செய்யப்பட்டவர்.

இந்த 2 அமைச்சர்களுக்கு மாற்றாக புதியவர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 3 பேரின் பெயர்கள் அடிபடுகின்றன. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

திமுக வலுவாக உள்ள இந்த டெல்டா மாவட்டங்களில் அதிக தொகுதிகளை வென்றும், ஒரு அமைச்சரை கூட தேர்வு செய்யாதது மக்கள் மத்தியிலும், கட்சியினர் இடையேயும் வருத்தத்தை ஏற்படுத்தியது. நானும் டெல்டாக்காரன் என்று ஸ்டாலின் கூறினாலும் அங்கு போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏவை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

இந்த நிலையில்தான் அங்கு திமுக பொருளாளர் டிஆர் பாலுவின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏவுமான டிஆர்பி ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சு எழுந்து உள்ளது. ஐடி விங் தலைவராக கட்சி பொறுப்பில் இவர் இருந்து வருகிறார். அதேபோல் திமுகவின் சீனியர் நிர்வாகியும், பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கா.அண்ணாதுரையும் அமைச்சர் பதவியை எதிர்நோக்கி காத்திருப்பதாக தொகுதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டுதான் இவர் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது பெயரும், திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணர் பெயரையும் சேர்த்து திமுக தலைமை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் இருந்து தேர்வாகும் எம்.எல்.ஏவுக்கு சுற்றுலா துறை ஒதுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.

அதேபோல் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வான இதே துறையில் முன்பு அமைச்சராக இருந்த தமிழரசி ரவிக்குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு அமைச்சர் உள்ளதால் அவர் தேர்வு செய்யப்படுவது கடினம் என்று சொல்லப்பட்டாலும், பெண் அமைச்சருக்கு மாற்றாக பெண்ணையே அமைச்சராக்குவது தலைமையில் முடிவாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் அமைச்சர்கள் இல்லாத காரணத்தால் சங்கரன்கோயில் தொகுதி எம்.எல்.ஏ. ராஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்பட்டாலும், அமைச்சரவையில் 2 பெண்களே இருப்பதால் தமிழரிசிக்கே வாய்ப்பு அதிகம் என்ற பேச்சு உள்ளது. அதேபோல், சேலம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி,  மாவட்ட எம்.எல்.ஏக்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான D. மதியழகனுக்கு ஜாக்பாட் அடிக்க வாய்ப்புள்ளது. 

 ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் போட்டியில் இருந்தாலும் அவர் மீது ஏராளமான புகார்கள் உள்ளதால் அவருக்கு வாய்ப்பு சற்று குறைவு தான். 

 அதனால் ஜெயலலிதா தொகுதி எம்.எல்.ஏ.வான D. மதியழகன் மந்திரியாவது உறுதி என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.

 அமைச்சராக இருந்த நிலையில், சுற்றுலா துறைக்கு மாற்றம் செய்யப்பட்டவர்.