ஈரோடு இடைத்தேர்தலில் இதற்கு பத்து நாட்கள் தடை.......?!

 ஈரோடு  இடைத்தேர்தலில் இதற்கு பத்து நாட்கள் தடை.......?!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 பிப்ரவரி 16 முதல் 27 வரைக்கும் அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் மூலமாக கருத்துக்கணிப்புகளை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், அனல் பறக்கும் பிரசாரத்தில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதியை முற்றுகையிட்டுள்ளதால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

 இன்று வேட்புமனுக்களை வாபஸ் பெற இறுதி நாளாகும். இன்று மாலை சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட சின்னங்கள் ஒதுக்கப்படும்.

இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; 1951ம் ஆண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126Aம் பிரிவின் விதித்துறைகளின்படி, (1) யாதொரு நபரும் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவதோ அல்லது வேறு ஏதேனும் முறையில், அது எதுவாயினும், பரப்பவோ கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தினால் இதுசம்பந்தமாக அறிவிக்கப்படலாம்.

உட்பிரிவு (1)-றின் காரணங்களுக்காக, தேர்தல் ஆணையம், ஒரு பொது ஆணைப்படி, பின்வருவனவற்றைக் கருத்தில் கொண்டு தேதி மற்றும் நேரத்தை அறிவிக்கும், அதாவது:- (a) ஒரு பொதுத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம். (b) ஓர் இடைத்தேர்தல் அல்லது பல இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் மற்றும் வாக்குப்பதிவின் முதல் நாளிலிருந்து வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம்.

பல இடைத்தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், கடைசி வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரம் வரை தொடரலாம். இப்பிரிவின் விதிமுறைகளை மீறும், யாதொரு நபரும் இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.

ஆ) 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126A ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன பிரிவின், (2) (b)ஆம் உட்பிரிவின் விதித்துறைகள் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம், 16.02.2023 (வியாழக்கிழமை) காலை 7.00 மணியிலிருந்து 27.02.2023 (திங்கட்கிழமை) மாலை 7.00 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது (அது எதுவாயினும்) ஆகியவை தடை செய்யப்பட வேண்டிய கால அளவாக இதனால் அறிவிக்கிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இ) 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126 (1) (b) ஆம் பிரிவின் கீழ், மேற்காணும் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் தொடர்பாக வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.