திராவிட மாடல் ஆட்சியின் அத்துமீறல்... விருதுநகர் பெண்ணுக்கு தொடரும் பாலியல் தொல்லை..... ஸ்டாலின் கவனிப்பாரா.,?!

 திராவிட மாடல் ஆட்சியின் அத்துமீறல்... விருதுநகர் பெண்ணுக்கு தொடரும் பாலியல் தொல்லை..... ஸ்டாலின் கவனிப்பாரா.,?!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கவிதா. கடந்த 2 வருடங்களாக கணவனை பிரிந்து வசிக்கும் கவிதாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கவிதா தனது குடும்ப வருமானத்திற்காக வீடு வீடாக சென்று அப்பளம் மற்றும் வெள்ளை பூண்டு வியாபாரம் செய்து அதில் கிடைக்கும் சிறிய வருவாயைக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறார்.

இந்நிலையில் முன்னாள் பேரூர் கழக துணை தலைவரும், திமுக பிரமுகருமான அய்யனார் என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக கவிதாவுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் கவிதாவிற்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அதற்காக தான் சொல்லும் கட்சி முக்கிய பிரமுகர்களுடன் எல்லாம் உல்லாசமாக இருக்க வேண்டும் எனவும் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், திமுக பிரமுகர் அய்யனாரின் வற்புறுத்தலுக்கு கவிதா இணங்க மறுத்து வந்துள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த அய்யனார் தொடர்ந்து கவிதாவுக்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தனது அடியாட்களுடன்  கவிதாவின் வீட்டிற்கு சென்ற அய்யனார், ‘நான் சொல்வதை கட்டாயம் கேட்க வேண்டும்’ என மிரட்டல் விடுத்து கவிதா மற்றும் அவர் தாயாரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த கவிதா மற்றும் அவரது தாயார் இதுதொடர்பாக மம்சாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரையிலும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கட்சி பிரமுகர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தி தன்னை தாக்கிய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துறை தலைவர் ஆகியோருக்கும் கவிதா புகார் மனு அளித்துள்ளார்.

ஆனாலும் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாதால் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததோடு, முக்கிய பிரமுகர்களுடன் உல்லாசமாக இருக்க இணங்க மறுத்த தன்னை தாக்கிய திமுக பிரமுகர் அய்யனார் மற்றும் அவருடன் வந்த அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கவிதா தனது உறவினர்களுடன் மம்சாபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தைப் பேசிப்பேசியே ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழக  உடன்பிறப்புகளே இப்போது இதுபோன்ற வன்கொடுமையில் ஈடுபடுவதுதான் திராவிட  மாடலா...?  என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் விருதுநகர்  கவிதாவின் வழக்கை ஏற்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

பொள்ளாச்சி சம்பவத்திற்கு நீதி கேட்ட ஸ்டாலின். இதற்கும் உரிய நீதி வழங்க வேண்டும் என்பது விருதுநகர் மக்களின் கோரிக்கை.