கூடங்குளம், முதலாவது அணு உலையில், 70 நாட்களுக்கு பிறகு, மீண்டும் மின்உற்பத்தி தொடக்கம்!
திருநெல்வேலி,செப்.2:-
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்
கூடங்குளத்தில், "ரஷ்ய" நாட்டு, தொழில்நுட்ப உதவியுடன், தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த இரு அணு உலைகளில் இருந்தும், உற்பத்தியாகும் மின்சாரம், திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள, மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு, மின்விநியோகம் செய்யப்பட்டு, வருகிறது.மேலும், 3-ஆவது மற்றும் 4-ஆவது அணுஉலைகள் அமைக்கும் பணிகளும், முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எரிபொருள் மாற்றுதல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக, அணுஉலைகளில் ஆண்டுக்கு ஒருமுறை, சில நாட்கள் மின்உற்பத்தி நிறுத்தப்படும்.அதன் அடிப்படையில், எரிபொருள் நிரப்புவதற்காகவும், பராமரிப்பு பணிகளை மேற் கொள்வதற்காகவும், முதலாவது அணு உலையில், இந்த ஆண்டு (2021) ஜூன் மாதம், 22-ஆம்தேதி, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.இதன் காரணமாக, அந்த அணுஉலையில், மின்உற்பத்தி நடைபெறவில்லை. தொடர்ந்து, அந்த அணு உலையில், கடந்த இரண்டு மாதங்களாக, பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது, அவை அனைத்தும் முடிவடைந்து விட்டதால், கூடங்குளம் முதலாவது அணு உலையில், 70 நாட்களுக்கு பிறகு, இன்று ( செப்டம்பர்.2) அதிகாலையில், மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. முதற்கட்டமாக, 250 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இன்னும், ஓரிரு தினங்களுக்குள், முதலாவது அணுஉலையில், அதன் முழு உற்பத்தி திறனான, ஆயிரம் மெகா வாட், உற்பத்தி எட்டப்பட்டு விடும்!" என, கூடங்குளம் அணுமின்நிலைய, அதிகாரப்பூர்வ "செய்திக்குறிப்பு" ஒன்று, தெரிவிக்கிறது. இரண்டாவது அணு உலையில், வழக்கம்போல, ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது! என்று, அந்த செய்திக்குறிப்பில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.