விவசாயிகளுக்கு ரூ.2,000... ஒன்பதாவது தவணை ஆகஸ்ட் 9ஆம் தேதி வழங்குகிறார் பிரதமர் மோடி

 விவசாயிகளுக்கு ரூ.2,000... ஒன்பதாவது தவணை ஆகஸ்ட் 9ஆம் தேதி வழங்குகிறார் பிரதமர் மோடி


*பிஎம் கிசான் திட்டத்தின் 9ஆவது தவணைப் பணம் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது*

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கின்றனர். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து நிதியுதவி பெற்று வருகின்றனர். பிஎம் கிசான் திட்டத்துக்கான நிதியுதவியை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு நேரடியாக டெபாசிட் செய்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 8 தவணைகளாக விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 9ஆவது தவணைப் பணத்தை டெபாசிட் செய்யும் பணி தொடங்கவிருக்கிறது. அரசு தரப்பிலிருந்து வெளியாகியுள்ள தகவலின்படி, ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் 9ஆவது தவணைப் பணம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தகுதியுடைய விவசாயிகளுக்கு பணம் விரைவாக வந்துசேரும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, முதல் தவணையில் மொத்தம் 3.16 கோடி விவசாயிகள் நிதியுதவி பெற்றனர். அதைத் தொடர்ந்து 2ஆவது தவணையில் 6.63 கோடி விவசாயிகளும், 3ஆவது தவணையில் 8.75 கோடி விவசாயிகளும், 4ஆவது தவணையில் 8.95 கோடி விவசாயிகளும், 5ஆவது தவணையில் 10.48 கோடி விவசாயிகளும், 6ஆவது தவணையில் 10.21 கோடி விவசாயிகளும், 7ஆவது தவணையில் 10 கோடி விவசாயிகளும், 8ஆவது தவணையில் 11 கோடி விவசாயிகளும் பயன்பெற்றனர்.