இனி சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் RTE ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கலாம்

இனி சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் RTE ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கலாம்


சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கை; விண்ணப்பங்கள் விரைவில் கல்வித்துறை இணையத்தில் பதிவேற்றம்*

தனியார் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களில் நடைபெறும் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களைப் பள்ளிக் கல்வி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி 2 வாரத்தில் ஏற்படுத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த அமுதன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

’’மத்திய அரசின் பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவீத இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களைப் பள்ளிக் கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதியில்லை. பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் மெட்ரிக் பள்ளிகளின் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது.

எனவே, தனியார் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டங்களில் செயல்படும் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட இட ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கை  விண்ணப்பங்களைப் பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்’’.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில், ''2 வாரத்தில் பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இலவச கட்டாய கல்வி சட்டம் அமல்படுத்தப்பட்ட போதிலிருந்தே சிபிஎஸ்இ பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று பலரும் கோரி வருகின்றனர் இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இந்த வாய்ப்பு இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைப்பது உறுதியாகி உள்ளது