டிசம்பர் 17ஆம் தேதி தமிழகத்தில் பேருந்துகள் ஓடாது?

 
டிசம்பர் 17ஆம் தேதி தமிழகத்தில் பேருந்துகள் ஓடாது? 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 
  • தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. அதன்பிறகு நிலைமை ஓரளவு சரியானவுடன், பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. மாநிலத்திற்கு உள்ளே மட்டும் பொதுப் போக்குவரத்து முதலில் அனுமதிக்கப்பட்டது.

பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி

அதன்பின்னர் தீபாவளியை ஒட்டி கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. இதையடுத்து இரு மாநிலங்களுக்கு இடையில் தொடர்ந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது முகக்கவசம், போதிய சரீர இடைவெளியுடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்

இருப்பினும் பல பேருந்துகள் அனைத்து இருக்கைகளிலும் பயணிகளை ஏற்றிக் கொண்டு விதிமீறல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில் தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று (டிசம்பர் 2) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளான 14வது சம்பள ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும்.

வேலைநிறுத்த அறிவிப்பு

சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை உடனே வரவு வைக்க வேண்டும் உள்ளிட்டவை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி இன்றைய தினம் (டிசம்பர் 3) அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கு வேலைநிறுத்த அறிவிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்க தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

ஒருநாள் தமிழக பேருந்துகள் ஓடாது

இதன் தொடர்ச்சியாக 14, 15 ஆகிய தேதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும். பின்னர் வரும் 17ஆம் தேதிக்குள் தமிழக அரசும், போக்குவரத்து துறையும் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண கெடு விதிக்கப்படும். இல்லையெனில் டிசம்பர் 17ஆம் தேதியோ அல்லது அடுத்த ஆறு வாரங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஏழை, எளிய மக்கள் பெரிதும் நம்பியிருப்பது அரசு பேருந்துகளையே ஆகும்.

எனவே அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்தால் அன்றைய தினம் பேருந்துகள் ஓடாது. இது பொதுமக்களை பெரிதும் பாதிக்கும். அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டிய கட்டாயத்தில் மாநில அரசு இருக்கிறது. இல்லையெனில் அது அரசுக்கு எதிராக தேர்தலில் திரும்ப வாய்ப்புண்டு.

அரசு ஊழியர்கள் ஏமாற்றம்

இதனைக் கருத்தில் கொண்டால் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளின் விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் தீபாவளியை ஒட்டி தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று பல்வேறு தொழிற்சங்கத்தினரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு தரப்பு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக அரசுக்கு சிக்கல்

இதனால் அரசு போக்குவரத்து ஊழியர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் மாநில அரசின் செயல்பாடுகள் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும். எனவே தமிழக அரசு மிகவும் கவனமாக காய்களை நகர்த்தும் என்று கூறப்படுகிறது.