ஒரு நாடு - ஒரு ரேஷன் திட்டத்தால் என்ன பயன்? 

ஒரு நாடு - ஒரு ரேஷன் திட்டத்தால் என்ன பயன்? 




இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் ஒரு நாடு - ஒரு ரேஷன் அட்டைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ரேஷன் கார்டுகளைக் கொண்டு எந்தவொரு ரேஷன் கடையிலும் வாங்கிக்கொள்ளலாம். பிற மாநிலங்களிலிருந்து பிழைப்பைத் தேடி வரும் மக்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
 

இந்நிலையில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகை குறித்த இன்றைய அறிவிப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டத்தின் கீழ் இடம்பெயர் தொழிலாளர்கள் அதிகப் பயன்பெறலாம் என்று கூறினார். கொரோனா போன்ற சமயங்களில் இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களுக்கு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் பெரிதும் உதவும்.


வேறு மாநிலங்களுக்குச் சென்றிருந்தாலும் அங்குள்ள ரேஷன் கடைகளில் அதே ரேஷன் அட்டைகளைக் கொண்டு உணவுப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இத்திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் 23 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இதன் மூலம் 67 கோடிப் பேர் பயன்பெறுவார்கள் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

உணவு தானியங்கள் கூடுதலாக வழங்குவது குறித்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், ரேஷன் அட்டை இல்லாத குடும்பங்களுக்கு ஏற்கெனவே அறிவித்த சலுகை மட்டுமல்லாமல், நபர் ஒருவருக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி, ஒரு கிலோ சன்னா பருப்பு அடுத்த இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும் என்றார்.


மேலும், இடம் பெயர் தொழிலாளர்கள் வாழும் இடங்களில் மாநில அரசுகள் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறியதோடு, இத்திட்டத்தின் மூலம் சுமார் 8 கோடி இடம்பெயர் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் எனவும். இதற்காக மத்திய அரசுக்கு ரூ.3,500 கோடி கூடுதலாகச் செலவாகும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.