தமிழகத்தில் 'மைனர்' பிரசவங்கள் அதிகரிப்பு: முதலிடத்தில் தருமபுரி

 தமிழகத்தில் 'மைனர்' பிரசவங்கள் அதிகரிப்பு: முதலிடத்தில் தருமபுரி 

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் `மைனர்' பெண்களின் பிரசவம் அதிகரித்துள்ளது. தருமபுரி அரசு மருத்துவமனையில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 3,429 பிரசவம் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்திலுள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அண்மைக் காலமாக `மைனர்' பெண்களின் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக தருமபுரி அரசு மருத்துவமனையில் மட்டும் 2021, 2022, 2023 ஆகிய 3 ஆண்டுகளில் மொத்தம் 3,429 எண்ணிக்கையில் `மைனர்' பெண்களின் பிரசவம் நடந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக கரூரில் 1,057, வேலூரில் 921, சிவகங்கை 439, திருச்சி 349 என்று பட்டியல் நீழ்கிறது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் பதிவான எண்ணிக்கைகளைவிட பல மடங்கு தருமபுரியில் பதிவாகியிருக்கிறது.

கடந்த 1990-களில் பெண் சிசு மரணம், குழந்தைத் திருமணம், அதிகமாக இந்த மாவட்டத்தில்தான் நடந்தது. அதன் பின்பு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சிசு மரணம், குழந்தைகள் திருமணம் தடுக்கப் பட்டது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகள், தனியார் மருத்துவ மனைகள் என்று கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை இன்னும் பல ஆயிரம் கூடுதலாக இருக்கும் என கூறப்படுகிறது.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த சுகாதாரச் சமூகச் செயற்பாட்டாளர் வெரோனிகா மேரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மேற்கண்ட தகவலைப் பெற்றுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: தென் மாவட்டங்களில் மதுரை மற்றும் திருநெல்வேலியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் ஆண்டுக்கு ஆயிரம் 18 வயதுக்குட்பட்ட பிரசவங்கள் நடந்துள்ளன. 2021 முதல் 2023 மே மாதம் வரையிலான 29 மாதங்களில் மட்டும் 1,958 பிரசவங்கள் நடந்துள்ளன.

திருநெல்வேலி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 1,101 பிரசவங்கள் நடந்திருக்கின்றன. இதே காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வெறும் 11 பிரசவங்கள் மட்டுமே நடந்துள்ளன.

இதே போன்று தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிகக் குறைவான எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. நடப்பு நிதியாண்டில் சமூக நலத் துறைக்கு ரூ.7,745 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிதி மூலம் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் `மைனர்' பெண்கள் பிரசவம் போன்ற சில திட்டங்களில் பின்தங்கியுள்ளது.

தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள இந்தப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண் குழந்தைகளின் உடல் மற்றும் மனரீதியான மருத்துவம், கல்வி, எதிர்காலம் உள்ளிட்ட அனைத்து விதத்திலும் அவர்களுக்கு முறையான கவுன்சலிங் வழங்க வேண்டும்.

சமூக நலத் துறை, சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை, காவல்துறை ஒருங்கிணைந்து செயல்பட்டு இத்தகைய சமூகப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பிரசவத்துக்குக் காரணமானோர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவம் மற்றும் சமூக நலத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''தற்போது குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

அப்படியிருந்தும் பொருளா தாரத்தில் பின்தங்கிய ஏழ்மையான குடும்பங்களில் 16, 17 வயதுகளில் நடக்கும் திருமணங்கள், பெற்றோருக்குத் தெரியாமல் நடக்கும் திருமணங்களில் `மைனர்' பெண்களுக்கு இதுபோன்ற பிரசவங்கள் நடக்கின்றன. இதையும் தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்படுகிறது, '' என்றனர்.