அண்ணாமலை தான் CM''.. ரஜினி சொன்ன ரகசியம்...?!

 அண்ணாமலை தான் CM''.. ரஜினி சொன்ன ரகசியம்...?!

ரஜினிகாந்திடம் நீங்க முதலமைச்சராக விருப்பமில்லை என்கிறீர்கள், வேறு யார் முதலமைச்சராக வரக்கூடும் என தாம் கேட்டதற்கு ''அண்ணாமலைன்னு ஒருவர் இருக்காரு சார்'' என்று தன்னிடம் ரஜினிகாந்த் பதிலளித்ததாக துக்ளக் விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியிருக்கிறார்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினி தன்னிடம் சொன்னதை, ஆடிட்டர் குருமூர்த்தி இப்போது போட்டு உடைப்பதற்கு காரணம் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் ரசிகர்களின் வாக்குகளை அறுவடை செய்யவா என்ற விவாதம் எழுந்துள்ளது.

அண்ணாமலையை பற்றி ரஜினிகாந்த் தன்னிடம் கூறிய போது தனக்கு அண்ணாமலை யாரென்று கூட தெரியாது என்றும் அவர் கர்நாடகாவில் ஐ.பி.எஸ்.ஆக இருக்கிறார் என்பது மட்டும் நாளிதழ் வாயிலாக தெரியும் எனவும் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அண்ணாமலை என்று புகழாரம் சூட்டிய குருமூர்த்தி, தமிழக பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரமாக அண்ணாமலை திகழ்கிறார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

அரசியலுக்கு வரவில்லை என்றால் அண்ணாமலை இந்நேரம் நிம்மதியாக இருந்திருப்பார் என்றும் அரசியலுக்கு வந்ததால் நிம்மதியை இழந்து கட்சிக்காக உழைத்து வருகிறார் எனவும் ஏகத்துக்கும் புகழ்மாலை சூடினார். பொதுவாழ்வில் ஈடுபடுவதற்கான நேர்மை, நாணயம், உழைப்பில் நம்பிக்கை, துணிவு என அத்தனை குணாதிசயங்களும் அண்ணாமலையிடம் இருப்பதாகவும் பேசினார்.

அரசியல் செய்வது என்பது மிகவும் சவாலான காரியம் என்றும் தமிழ்நாட்டில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் கருவியாக அண்ணாமலை இருப்பார் என நம்புவதாகவும் கூறிய ஆடிட்டர் குருமூர்த்தி, அண்ணாமலையை ஒவ்வொரு முறையும் தாம் நேரில் பார்க்கும் போதெல்லாம் உங்கள் உடல் நிலையை பார்த்துக்கொள்ளுங்கள் என்று தான் தாம் கூறி வருவதாகவும் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் சொன்ன விஷயத்தை பொதுவெளியில் வைத்து துக்ளக் இதழ் விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி உடைத்து பேசியது, தமிழக அரசியல் களத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.