முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் ஐ கைது செய்ய திமுகவினர் முயற்சி...?!

முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் ஐ கைது செய்ய திமுகவினர் முயற்சி...?!

தருமபுரி மாவட்ட திமுக அரசியலில் மிக முக்கியமான நபராக வலம் வந்தவர் முல்லைவேந்தன். பள்ளி ஆசிரியராக தனது வாழ்வை தொடங்கி பின்நாளில் மேடை பேச்சில் வல்லவராக திகழ்ந்ததால் திமுகவில் இணைந்து மாவட்ட செயலாளர் பதவி வரை உயர்ந்தவர்.


சிறப்பாக கட்சிப் பணி செய்ததற்காக 1989, 1996, 2006 சட்டமன்ற தேர்தல்களில் மொரப்பூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார். கட்சியில் சிறப்பாக பணி செய்த காரணத்தால் 1996-ல் கருணாநிதி அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், ஒகேனக்கல் பகுதியில் அறநிலையத்துறை அதிகாரி ஒருவரை தனது ஆதரவாளர்கள் தாக்கிய புகாரில் சிக்கியதால் 2001 துவக்கத்தில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன் பிறகு கட்சியில் மெல்ல மெல்ல செல்வாக்கு குறைந்து அமைதியாக காணப்பட்டார். இந்தநிலையில், 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் திமுக படுதோல்வியடைந்தது. தோல்விக்கான காரணம் கேட்டு முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனுக்கு கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அதற்கு முறையான பதில் அளிக்காத காரணத்தால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன் பிறகு அமைதியாக இருந்த அவர், 2016-ம் ஆண்டு தேமுதிகவில் இணைந்து கொள்கை பரப்புச்செயலாளராக உயர்ந்தார். ஆனால், அங்கும் நீண்ட காலம் தாக்குப்பிடிக்கவில்லை. கருணாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்தபோது பார்க்க வந்த முல்லைவேந்தன், ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தன்னை மீண்டும் திமுகவில் இணைத்துக்கொண்டார். ஆனால், பொறுப்புகள் ஏதும் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.

இந்தநிலையில், தான் 2021 சட்டமன்ற தேர்தலின் போது தனது ஆதரவாளர்கள் சுமார் 5,000 பேருடன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அதன் பிறகு அதிமுக உறுப்பினராக மட்டுமே வலம் வந்துக் 
கொண்டிருக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவருக்கு ஆதரவு தெரிவித்து நேரில் சென்ற முல்லைவேந்தன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். அதோடு ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தநிலையில், நேற்று(ஏப்ரல் 5) தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு தமிழக அரசு சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முல்லைவேந்தன், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். அதோடு, தருமபுரி மாவட்ட திமுகவில் ஆண்மையுடையவர்கள் யாரும் இல்லை என்பதால் தான் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இந்த மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பேசினார்.அதோடு, ’திருவண்ணாமலை திருடன்’ தருமபுரி வந்துச்செல்வதற்காக அரூர் - தருமபுரி நான்கு வழிச்சாலை போடப்படுவதாக அமைச்சர் ஒருவரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
dharmapuri dmk

முல்லைவேந்தன் மீது புகார் கொடுத்த திமுகவினர்


இதனிடையே, முதலமைச்சரை ஒருமையில் பேசிய முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தருமபுரி மாவட்ட திமுக சார்பில் நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முல்லைவேந்தன் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இருந்தாலும் இதற்கெல்லாம்  கூட ஒருவரை கைது செய்ய முடியுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.  இப்படி எல்லாம் ஒவ்வொருவர் பேசுகின்ற ஒவ்வொரு பேச்சுக்கும் வழக்கு தொடுத்தால் நாட்டில் எத்தனை பேரை கைது செய்ய முடியும்.

இப்போது நடக்கும் ஆட்சி அலங்கோலத்தை பார்த்து பலரும் இது ரவுடி ஆட்சி,  அராஜகத்தின் ஆட்சி என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இது இதுபோன்ற  பேச்சுகளுக்கு எல்லாம் கைது நடவடிக்கை எடுத்தால்  எதிர்க்கட்சியை  சார்ந்தவர்களை மட்டுமல்ல ஆளுங்கட்சியில் உள்ளவர்களையும் சிறையிலடைக்க நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் இடம் இல்லாமல் போய்விடும்.