பொய்களைப் பொடிப் பொடியாக்கும் நீட் முடிவுகள்: இனியாவது தமிழக மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவார்களா....? இல்லை தற்கொலைக்கு தூண்டுவார்களா....?

 பொய்களைப் பொடிப் பொடியாக்கும் நீட் முடிவுகள்: இனியாவது தமிழக மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவார்களா....?  இல்லை தற்கொலைக்கு தூண்டுவார்களா...?


மேடைகளில், தொலைக்காட்சி. விவாதங்களில் , ராஜன் குழு அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளில் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் பொய்களைப் பொடிப் பொடியாக்கியிருக்கிறது நேற்று வெளியான நீட் முடிவுகள்

 பொய்# 1: நீட் தேர்வு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு சாதகமானது. 

முடிவுகள் சொல்லும் உண்மை:  இந்தாண்டு நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களில் 66.5 சதவீதம் பேர் பல்வேறு 22 மாநில போர்ட்களில் படித்தவர்கள். 

பொய்# 2: அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவது கடினம்

 முடிவுகள் சொல்லும் உண்மை: திருச்சியில் மட்டும், அரசு நடத்திய பயிற்சி வகுப்புகளில்  பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 62 பேர் இநதாண்டு நீட் தேர்வில் தகுதி பெற்றிருக்கின்றனர்.

 பொய்#3 அரசுப் பள்ளி மாணவர்கள்  முதல் முறையில் நீட் தேர்வில் தகுதி பெற முடியாது.

முடிவுகள் சொல்லும் உண்மை:  அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ள மூவருமே முதல் முறையாகத் தேர்வு எழுதியவர்கள். பி.ஆர். பிரியங்கா (அவ்வை மாநகராட்சி  மேல்நிலைப் பள்ளி மதிப் பெண் 414)  ஹரீஷ் குமார் (ஏழுமலை  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண்: 373) எஸ். ஆஷிகா (ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண் 351)  ஆகிய மூவரும் முதலிடம் பிடித்த மூவர். மூவருமே முதல் முறையாகத் தேர்வு எழுதிiயவர்கள்.

பொய்#4 கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது நீட் தேர்வு

முடிவுகள் சொல்லும் உண்மை:  கோவை மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பனூர் என்ற கிராமத்திலேயே +2 தேறிய முதல் பெண் எம். சங்கவி. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அவர் இந்தாண்டு 202 மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்றுள்ளார். அரசு மருத்துவக் கல்லூரிகள் ஏதேனும் ஒன்றில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு விவசாயக் கூலியான தன் தந்தையை இழந்த இளம் பெண் இவர்

பொய்# 5: தமிழக மாணவர்களுக்கு  நீட் தேர்வு கடினமானது

முடிவுகள் சொல்லும் உண்மை:  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தகுதி  பெற்றுள்ளனர் கடந்த ஆண்டு : 57 216. இந்த ஆண்டு: 58,922

அறிய வேண்டியது: முனைப்போடு உழைத்தால் எவரும் நீட்டில் தகுதி பெறலாம்

செய்ய வேண்டியது: 

#1 நீதிமன்றத்தில் இந்த தரவுகளை எடுத்து வைத்து நீட் எவருக்கும் எதிரானது அல்ல என்று நிறுவ வேண்டும்

#2  இந்த உண்மைகளை மாணவர்களுக்கு, குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள், தன்னார்வத் தொண்டர்கள் நம்பிக்கை ஊட்ட வேண்டும்

செய்வார்களா?

இந்த முடிவுகள் குறித்து நம் தொலைக்காட்சிகள் அலசுவார்களா?

இல்லை தோல்வி அடைந்த மாணவர்களை தற்கொலைக்கு தூண்டுவார்களா...? அல்லது தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே நீட்பற்றிய தவறான அபிப்பிராயங்களை அவர்கள் மனதில் வைத்து பயம் காட்டுவார்களா...?