மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் ஏன்?: மோடி விளக்கம்...!

மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் ஏன்?: மோடி விளக்கம்...!

சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது ஏன் என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று விளக்கம் அளித்தார். 

* ''மூன்று வேளாண் சட்டங்களின் நன்மைகளை, விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.

* போராட்டத்தை கைவிட்டு, விவசாயிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும்,'' என, பிரதமர்வேண்டுகோள் விடுத்துள்ளார். 

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் மூன்று விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது.

* விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்ட திருத்த மசோதா, விலை உத்தரவாதம் மற்றும் பண்ணைச் சேவை மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள், பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டன. 

* ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து இந்த சட்டங்கள் அமலுக்கு வந்தன. 

* இதற்கு ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

* **இந்த சட்டங்களை திரும்பப் பெறக்கோரி கடந்த ஆண்டு நவ., 26 முதல், டில்லியின் எல்லைகளில் மூன்று மாநிலங்களின் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். **

* விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு 11சுற்று பேச்சு நடத்தியும், பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை. 

* இதற்கிடையில் இந்த சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், மூன்று சட்டங்களையும் அமல்படுத்த இடைக்கால தடை விதித்தது; விவசாயிகளின் போராட்டமும் தொடர்ந்தது.

இந்நிலையில், 'டிவி' சேனல்கள் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

**அப்போது அவர் பேசியதாவது:**

* என் 50 ஆண்டு கால பொதுப்பணியில் விவசாயிகளின் துயரத்தை உணர்ந்திருக்கிறேன். 

* அதனால் தான் மக்கள் என்னை பிரதமராக்கியதும், விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்தேன்.

* விவசாயிகளுக்கு மண் ஆரோக்கிய அட்டைகள் வழங்கியுள்ளோம்; இது, விவசாய சாகுபடியை அதிகரிக்க உதவியுள்ளது.

* 'பசல் பீமா யோஜனா' என்ற பயிர் காப்பீடு திட்டத்தால், விவசாயிகளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. 

* விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நிதியுதவி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

* கிராமப்புற விவசாய சந்தை கட்டமைப்பு வலுப்படுத்தப் பட்டுள்ளது. 

* 1,000 மண்டிகள் மின்னணு மண்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. 

* விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

* விவசாயிகளுக்காக நுண் பாசனத் திட்டத்துக்கான நிதி இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

* விவசாயிகளின் நிதி நிலைமை மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

* விவசாயிகளின் நலனுக்காகவே மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. 

* சிறு விவசாயிகள் முன்னேற்றம் அடையவும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பின் தான், இந்த சட்டங்களை நிறைவேற்றினோம்.

* ஆனால், சட்டம் தொடர்பாக தவறான தகவல் பரப்பப்பட்டது.

* அதனால், விவசாயிகளின் ஒரு பகுதியினர் இந்தச் சட்டத்தை எதிர்த்து வருகின்றனர்,

* வேளாண் சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளிடம் விளக்கி எடுத்துச் சொல்ல முயற்சித்தோம். 

* போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பல சுற்று பேச்சு நடத்தினோம். 

* சில திருத்தங்களைக் கூட மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினோம். 

* ஆனால், போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் வேளாண் சட்டங்களுக்கான ஆதரவை பெற முடியவில்லை. 

* **எங்களின் முயற்சிகள் தோல்வியடைந்தன. இதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.**

* அதனால், மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். 

* இது தொடர்பான நடவடிக்கைகள், வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்படும்.

* இதனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு, தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். 

* ***நான் எதை செய்தேனோ, அதை விவசாயிகளின் நலனுக்காகவே செய்தேன். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேனோ, அதை தேசத்துக்காகவே செய்கிறேன்.***

* இந்த தேசத்தின் கனவுகளும், உங்களின் கனவுகளும் நனவாவதற்காக இன்னும் கடினமாக உழைப்பேன். 

* விவசாயிகளின் நலனும், விவசாய மேம்பாடும் தான் எங்களின் பிரதான பணி.நாட்டில் விவசாயத் துறையை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

* குறைந்தபட்ச ஆதார விலையை வலுப்படுத்த விவசாயிகள், வல்லுனர்கள், விஞ்ஞானிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

# **போராட்டம் இன்னும் முடியவில்லை**

**பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கூறியதாவது:**

* மூன்று விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் அறிவித்திருப்பது, நாங்கள் ஓராண்டாக நடத்தி வந்த போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. 

* இந்த போராட்டத்தில் உயிரிழந்த 750க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கும், போராட்டத்தில் பங்கேற்ற பழங்குடியினர், தொழிலாளர்கள், பெண்களுக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம். 

* எங்கள் போராட்டம் இன்னும் முடியவில்லை. 

* விவசாய சட்டங்களை வாபஸ் பெறும் மசோதாவை, பார்லி.,யின் இரு சபைகளிலும் நிறைவேற்ற வேண்டும். 

* குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாத சட்டம் உருவாக்கப்பட வேண்டும். 

* அப்போது தான் போராட்டத்தை முடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

**மத்திய வேளாண் அமைச்சர் கூறுவது என்ன?**

புதுடில்லி ;மத்திய விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:

* விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை விற்பதில் உள்ள தடைகளை நீக்கும் நோக்கிலும், சிறு, குறு விவசாயிகளின் நலன் கருதியும், மூன்று சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது.

* பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு பெரும் பலன் அளிக்க கூடியவை. 

* விவசாயிகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான், இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. 

* விவசாய அமைப்புகளிடம் இந்த சட்டங்களின் பலன்கள் பற்றி எடுத்துக் கூறியும், அவர்களை ஏற்க வைக்க முடியாமல் போனது பெரும் வருத்தம் அளிக்கிறது. 

* விவசாயிகள் நலனில் மத்திய அரசு பெரும் அக்கறை வைத்துள்ளது. 

* அவர்களின் சம்மதத்தை பெற முடியாமல் போனதால், மூன்று சட்டங்களை வாபஸ் பெறும் முடிவு வரவேற்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.

# **வாபஸ் பெறுவது எப்படி?**

**சட்டத்துறை முன்னாள் செயலர் பி.கே.மல்ஹோத்ரா கூறியதாவது:**

* அரசியலமைப்பு சட்டப்படி எவ்வாறு சட்டம் இயற்றப்படுகிறதோ, அதே முறையில் தான் சட்டத்தை திரும்ப பெறவும் வேண்டும். 

* அரசியலமைப்பு சட்டத்தின் 245வது பிரிவு, பார்லி.,க்கு சட்டங்களை இயற்றவும், அதை திருத்தம் செய்து திரும்ப பெறவும் அதிகாரம் வழங்கியுள்ளது.

* வேளாண் சட்டங்களை மத்திய அரசு இரு வழிகளில் வாபஸ் பெற முடியும். சட்டங்களை திரும்ப பெறுவதற்கான மசோதாவை, பார்லி.,யின் இரு சபைகளிலும் நிறைவேற்றுவது முதல் வழி. 

* அவசர சட்டம் பிறப்பித்து, மூன்று சட்டங்களையும் திரும்ப பெறுவது இரண்டாவது வழி.

* ஆனால், அடுத்த ஆறு மாதத்துக்குள் அந்த அவசர சட்டத்துக்கு பதிலாக மசோதா தாக்கல் செய்து, பார்லிமென்டில் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

**இதற்கு முன் வாபசான மசோதாக்கள்**

* இதற்கு முன் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட பின், பல மசோதாக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. அதில் முக்கியமான இரண்டு மசோதாக்கள்:

* * காங்கிரசைச் சேர்ந்த ராஜிவ் பிரதமராக இருந்த போது, 'இந்திய தபால் அலுவலக திருத்த மசோதா' பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

* பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க, அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜெயில் சிங் மறுத்தார். இதையடுத்து மசோதா வாபஸ் பெறப்பட்டது.

* * ராஜிவ் பிரதமராக இருந்த போது, 1988ல் பத்திரிகையாளர்களுக்கு எதிராக 'அவதுாறு மசோதா' லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. 

* கடும் எதிர்ப்பால் ராஜ்யசபாவில் நிறைவேற்ற முடியாமல் மசோதா வாபஸ் பெறப்பட்டது.

* * கடந்த 2015ல் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மீள்குடியேற்ற மசோதா தொடர்பாக கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு வாபஸ் பெற்றது.