"87% தடுப்பூசி போடாதவர்கள் உயிரிழப்பு" - தமிழக சுகாதாரத்துறை சொல்லும் அதிர்ச்சி தகவல்!!

"87% தடுப்பூசி போடாதவர்கள் உயிரிழப்பு" - தமிழக சுகாதாரத்துறை சொல்லும் அதிர்ச்சி தகவல்!!

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆகஸ்ட் , செப்டம்பர் மாதங்களில் கொரோனா  நாளொன்றுக்கு சுமார் 80,000 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.  இதில் 63 சதவீதம் பேர் கொரோனா  தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள்,  24 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள்,  அதேபோல் 13 சதவீதம் பேர் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள். 

corona vaccine

இதில் கொரோனா பாதிப்பின் வீரியம் அடைந்து மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்படுவோர்  எண்ணிக்கை 5 ஆயிரத்து 816 . இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1626.  இதன் மூலம் உயிரிழந்தவர்கள் 87 சதவீதம் பேரும்,  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 76 சதவீதம் பேரும் தடுப்பூசி  செலுத்தி கொள்ளாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதிலிருந்து கொரோனா  தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும்,  தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கும் இடையே தொற்று வீரியம் எவ்வாறு உள்ளது என்பது தெரிகிறது.  அதே சமயம் தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் முக கவசம் அணிவது , சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா நெறிகாட்டு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது.

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் வீரியம் குறைவாகவே இருக்கும் . அதே போல் அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமும் ஏற்படுவதில்லை.  உயிரிழப்பும் இவர்களுக்கு அதிக அளவில் ஏற்படுவதில்லை. தற்போது தமிழகத்தில் கொரோனா  தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருவதால்,  மக்களிடையே நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து வருகிறது என்று மருத்துவத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.