இன்று 25 லட்சம் பேருக்கு Corona தடுப்பூசி....!

இன்று 25 லட்சம் பேருக்கு Corona  தடுப்பூசி....!


தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியதடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டு செப்டம்பர் 12-ம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும் 19-ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.41 லட்சம் பேருக்கும் 26-ம் தேதி 23 ஆயிரம் இடங்களில் 24.85 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில், 4-வது கட்டமெகா முகாம் இன்று தமிழகம்முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் உட்பட மொத்தம் 20 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி போடப்படவுள்ளது.

தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகின்றனர். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 25 லட்சம் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த செப்டம்பர் மாதத்தில் 1.42 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 18 வயதைக் கடந்தவர்கள் 6 கோடியே 6 லட்சம் பேர் உள்ளனர். அதன்படி, 18 வயதைக் கடந்து தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தகுதியானவர்கள் என்கிற அடிப்படையில் 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 68 சதவீதம் பேர் போட்டுக் கொண்டுள்ளனர். அக்டோபர் மாதத்துக்குள் 70 சதவீதம் அளவுக்கு தடுப்பூசி போடப்படும்.

உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி 70 சதவீதத்துக்கு மேல் தடுப்பூசி போட்டுக் கொண்டால் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதாகும். 2-வது தவணை தடுப்பூசியை 20 சதவீதம் பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 65 வயதைக் கடந்தவர்களும், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டக்கூடாது.

4-ம் கட்ட மெகா முகாமில் 25 லட்சம் கரோனா தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் 1.50 கோடி அளவுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.