2 லட்சம் சதுர அடி கட்டடங்களுக்கு உள்ளூரிலேயே ஒப்புதல் பெறலாம்
சென்னை:இரண்டு லட்சம் சதுர அடி வரையிலான கட்டடங்கள், 24 ஏக்கர் வரையிலான மனை பிரிவுகளுக்கு, உள்ளூர் அளவில், விரைவாக திட்ட அனுமதி வழங்கும் வகையில், நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அனுமதி
சென்னை பெருநகர் தவிர்த்த பிற பகுதிகளில், கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் பணிகள், டி.டி.சி.பி., மேற்பார்வையில் நடக்கின்றன.
இதில், அதிக பரப்பளவு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க, டி.டி.சி.பி., இயக்குனரின் முன் அனுமதி பெற வேண்டும்.
அத்துடன், அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்தப்படும் குழும கூட்டங்களில், இந்த கோப்புகளுக்கு முன் அனுமதி வாங்குவது கட்டாயம்.
இந்த நடைமுறையால், கட்டட அனுமதி பணிகள் தாமதமாவதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலர் ராஜேஷ் லக்கானி, டி.டி.சி.பி.,க்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பொது கட்டட விதிகளின்படி, 2 லட்சம் சதுர அடி வரையிலான, குறைந்த உயர கட்டடங்கள், 24.71 ஏக்கர் வரையிலான மனைப் பிரிவுகளின் ஒப்புதல் நடைமுறை மாற்றப்படுகிறது.
இந்த விஷயத்தில், டி.டி.சி.பி., முன் ஒப்புதலுக்கு பின், கள அலுவலரே இறுதி ஒப்புதல் வழங்கலாம்.
இந்த கோப்புகளை, கலெக்டர் தலைமையிலான குழும கூட்ட ஒப்புதல் பெற தேவையில்லை.
தீர்மானம்ஒப்புதல் வழங்கப்பட்ட விபரங்களை, கலெக்டர் நடத்தும் கூட்டத்தில் தெரிவித்தால் போதும்.
உள்ளூர் திட்டக் குழுமங்களில், முறையான தீர்மானம் நிறைவேற்றி, இந்த நடைமுறை மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.