ஸ்ரைட்டா காரை தி.நகருக்கு திருப்பும் சசிகலா.. என்ன நடந்தது..?

 ஸ்ரைட்டா காரை தி.நகருக்கு திருப்பும் சசிகலா.. என்ன நடந்தது..? 



 சென்னை வரும் சசிகலா  எங்கு செல்வார்? இனிமேல் எங்கு தங்க போகிறார்? என்ற ஆர்வம் எழுந்து வருகிறது. 

ஒரு வாரம் டாக்டர்கள் ரெஸ்ட் எடுக்க சொன்னதால், தற்போது ரிசார்ட்டில் தங்கி உள்ள சசிகலா,  சென்னை வரபோகிறார். அவரை வரவேற்க அமமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது.. அதேபோல சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பை தருவதற்காக ஏராளமான தொண்டர்கள் திரள வாய்ப்புள்ளதால், தமிழக அரசு சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. 

 சட்டம் - ஒழுங்கு எந்த ரூபத்திலும் கெட்டுப்போய் விடக்கூடாது எனறு தீவிரத்தை கையில் எடுத்து வருகிறது. அதேபோல, அவரது வருகையை முன்னிட்டு சென்னையில் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், அனுமதியின்றி அரசியல் கட்சிகள் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பும் சசிகலா எங்கு தங்குவார் என்ற கேள்விகள் கடந்த வாரமே எழுந்தன.. அவர் ஜெயிலில் இருந்தபோதே, போயஸ் கார்டனில் புது வீடு கட்டப்பட்டது.. அந்த புதுவீட்டின் வேலைகளும் சமீபத்தில்தான் நடந்து முடிந்தது.. அதனால், அநேகமாக புதிய வீட்டில்தான் அவர் தங்குவதாகவும் தகவல்கள் கசிந்தன.

ஆனால், இதில் கடைசி நேரத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. தி நகர் அபிபுல்லா ரோட்டில், தன்னுடைய அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் தங்க போவதாக கூறப்படுகிறது.. 

இன்னும் இதுவரை சசிகலா யாருடனும் ஆலோசனை மேற்கொள்ளாத பட்சத்தில், இந்த வீட்டில் இருந்தே கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்திக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது..

சசிகலா தங்குவதற்காக அந்த வீடு ரெடியாகி வருகிறது.. மேலும் தொண்டர்களையும், கட்சி பிரமுகர்களையும் சந்திப்பதற்கு வசதியாக வீட்டின் வாயிலில் ஸ்பெஷல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. 

இதுவரை போயஸ் கார்டனில் இருந்து மட்டுமே செயல்பட்டு வந்த சசிகலாவின் அதிரடி அரசியல் தி.நகர் வீட்டில் இருந்தே தொடங்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.