தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு தடை.. தமிழக அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் போலீஸுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்த 1993-ஆம் ஆண்டு இந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பு முதல்முதலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பினர் வாகன தணிக்கை, குற்றவாளிகள் குறித்து தகவல், குற்றம் நடைபெறும் இடங்கள் குறித்த தகவல்கள் உள்ளிட்டவற்றை வழங்கி வந்தார்கள்.
இந்த நிலையில் சாத்தான்குளத்தில் தந்தை மகன் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பிற்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன. தந்தை மகன் இருவரையும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் தாக்கியதாக எழுந்த புகாரில் அந்த அமைப்பை சேர்ந்தவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸை பணியில் ஈடுபடுத்தத் தடை விதிக்கப்படுவதாக எஸ் பி ஜெயக்குமார் தெரிவித்தார். இந்த நிலையில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை கன்னியாகுமரி , ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த அமைப்பிற்கு இரு மாதங்களுக்கு தடை விதிப்பதாக வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பையும் தடை செய்யுமாறு தமிழக டிஜிபி திரிபாதி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். இதையேற்று பிரண்ட்ஸ் ஆப் போலீஸுக்கு தடை விதித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த பிரண்ட்ஸ் ஆப் அமைப்பு என்ற திட்டத்தையே கலைக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் குரலாக உள்ளது. முதலில் இரு மாதங்களுக்கு தடைவிதித்த நிலையில் தற்போது டிஜிபி பரிந்துரையை ஏற்று தமிழக அரசு தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.