மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் பேராசிரியர் சின்னசாமி வலியுறுத்தல்

 மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த  தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் பேராசிரியர் சின்னசாமி வலியுறுத்தல்




*கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஓசூரில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் பேராசிரியர் சின்னசாமி வலியுறுத்தல்.*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் ஸ்ரீராமுலு ரெட்டி தலைமையில் மின்வாரிய அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் பேராசிரியர் எஸ் ஏ சின்னசாமி மாநில பொதுச் செயலாளர் கே சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகளும் விவசாயிகளும் பங்கேற்றனர்.

தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தவாறு விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கால தாமதம் இன்றி உடனே வழங்க வேண்டும், யானைகள் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் பேராசிரியர் சின்னசாமி தெரிவிக்கையில், 

தமிழ்நாட்டின் விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநிலம் மேகதாது பகுதியில் அணைக்கட்டும் முயற்சியை அங்கு ஆளும் காங்கிரஸ் அரசு ஆனாலும், ஆட்சி செய்த பிஜேபி அரசு ஆனாலும் முன்னெடுத்து தமிழக விவசாயிகளுக்கு விரோதமான போக்கையே மேற்கொண்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே தமிழ்நாடு அரசு வெறும் அறிக்கைகள் வாயிலாக மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி வருவதை விடுத்து, தமிழக சட்டமன்றத்தை கூட்டி அணைக்கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தவும், மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது எனவும் தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். 

மேலும் இந்த மாத இறுதியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தேன்கனிக்கோட்டையில் இருந்து கர்நாடக மாநிலம் மேகதாதுவை நோக்கிச் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்... என அவர் தெரிவித்துள்ளார்.

பேட்டி : பேராசிரியர் எஸ் ஏ சின்னசாமி, மாநிலத் தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்