கிராம மக்களை அச்சுறுத்தி வந்த 70க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் : பட்டாசு வெடித்து கர்நாடக மாநிலத்திற்கு விரட்டும் பணிகள் தீவிரம்

 கிராம மக்களை அச்சுறுத்தி வந்த 70க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் : பட்டாசு வெடித்து கர்நாடக மாநிலத்திற்கு விரட்டும் பணிகள் தீவிரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சானமாவு,, ஊடேதுர்க்கம், நொகனூர் ஆகிய வனப்பகுதிகளில் முகாமிட்டு சுற்றித்திரிந்த 70க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் கர்நாடகா மாநிலத்திற்கு விரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 200க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, சானமாவு,, ஊடேதுர்க்கம், நொகனூர், ஜவளகிரி, தளி ஆகிய வனப்பகுதிகளில் முகாமிட்டு சுற்றித்திரிகிறது. இந்த காட்டு யானைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வருவதால் கிராமமக்கள் விவசாயிகள் காட்டுயானைகளை கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன், ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய 30க்கும் மேற்பட்ட குழுவினர் சானமாவு,, ஊடேதுர்க்கம், நொகனூர், தேன்கனிக்கோட்டை ஆகிய வனப்பகுதிகளில் பல்வேறு குழுக்களாக சுற்றித்திரிந்த 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை ஒன்றிணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அனைத்து காட்டு யானைகளையும் நொகனூர் வனப்பகுதிக்கு விரட்டி சென்ற வனத்துறையினர் அங்கிருந்து கர்நாடக மாநிலத்திற்கு விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர்.

அப்போது நொகனூர் வனப்பகுதியில் காட்டுயானைகள் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையை கடந்து சென்றது. காட்டு யானைகள் பாதுகாப்பாக செல்லும் வகையில் அப்பகுதியில் வனத்துறையினர் போக்குவரத்தை நிறுத்தி வைத்தனர். காட்டு யானைகள் அனைத்தும் சாலையை கடந்த பின்னர் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர். நொகனூர் வனப்பகுதியிலிருந்து கஸ்பா, தாவரக்கரை, தின்னூர், முள்பிளாட், அகலக்கோட்டை, ஜவளகிரி வழியாக 70க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை கர்நாடக மாநிலத்திற்கு வனத்துறையினர் தொடர்ந்து விரட்டி செல்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்தி விளை பயிர்களை சேதப்படுத்தி வந்த 70க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் விரட்டப்பட்டதால் கிராம மக்கள் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

B. S. Prakash