ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான நிலத்தை அவர்களிடமே வழங்க வேண்டும் கிருஷ்ணகிரி M.P. செல்லக் குமார் வேண்டுகோள்

 ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான  நிலத்தை அவர்களிடமே வழங்க வேண்டும் கிருஷ்ணகிரி M.P. செல்லக் குமார் வேண்டுகோள்



30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் மக்களுக்கு தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்து வழங்கிய வீட்டுமனை பட்டா செல்லாது என்று வீடுகளை காலி செய்ய சொல்வது ஏற்புடையது அல்ல - பாராளுமன்ற உறுப்பினர் செல்லக் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள பையணபள்ளி ஊராட்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு, 200 நபர்களுக்கு தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்து வீட்டுமனை பட்டா வழங்க பட்டது. அதன்பின்னர், நிலத்தின் உரிமையாளர் தனக்கு மீண்டும் நிலத்தை வழங்க சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு செய்து மீண்டும் நிலம் வழங்கிட உத்தரவு வாங்கி உள்ளார். இதனால் அங்கு குடியிருக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இங்கு நேரில் சென்று பார்வையிட்ட கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்லக் குமார், மக்களிடையே கருத்து கேட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், கிருஷ்ணகிரி அருகே உள்ள பையண பள்ளி ஊராட்சியில், கடந்த 2004 ஆண்டு முதல் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட சுகாதார பணிகள் அலுவலகம், வேளாண்மை அலுவலகம், மாவட்ட வன அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்கள் அமைக்கும் முன்பே தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்த நிலத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 200 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க பட்டது. அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் போது கூடுதலாக 50 நபர்களுக்கு இந்த இடத்தில் வீட்டு மனை பட்டா வழங்க பட்டது. அதற்கேற்ற இழப்பீடு தொகை போதாது என நிலத்தின் உரிமையாளர், வழக்கு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த இடங்கள்  சென்னை முதல் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை என வளர்ச்சி அடைந்த நிலையில் நிலத்தின் மதிப்பு அதிகளவில் 

உள்ளதால் எனக்கு அரசு கொள்முதல் செய்த நிலத்தை மீண்டும் திருப்பி வழங்கிட வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில்  கூடுதலாக மனு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் தனியார் இடம் திருப்பி வழங்கிட ஆணை பிறப்பித்தது. இதனை பயன்படுத்தி நிலத்தின் உரிமையாளர் 15 நாட்களில் வீடுகளை காலி செய்ய மிரட்டுவது கண்டனத்துக்கு உரியது. இத்தனை ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களை வெளியேற்றுவது உடனடியாக தடுக்க வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கொள்முதல் செய்த நிலங்கள் எல்லாம் தற்போது மீண்டும் திருப்பி வழங்கினால் மாநில அளவில் அரசு அலுவலகங்கள் எல்லாம் காலி செய்யும் நிலை ஏற்படும். எனவே இந்த உத்தரவை எதிர்த்து அரசு மனு செய்து நியாயமான தீர்ப்பு கிடைக்க செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் K  மூர்த்தி