மணப்பாறையில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது

 மணப்பாறையில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது


திருச்சி மணப்பாறை, மே.25- மணப்பாறையில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டார். ஊராட்சி செயலாளர் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர் தனது மனைவி பெயரில் புத்தாநத்தம் ஊராட்சியில் பல்வேறு ஒப்பந்த பணிகள் செய்து வருகிறார். இந்நிலையில் ரூ.4 லட்சம் மதிப்பில் செய்து முடிக்கப்பட்ட பணிக்கு, அதற்கான தொகையை பெற புத்தாநத்தம் ஊராட்சி செயலாளர் வெங்கட்ராமனை முகமது இஸ்மாயில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் அந்த தொகையை பெற வேண்டுமானால் ரூ.8 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால், அவர் தன்னிடம் ரூ.6 ஆயிரம் தான் இருப்பதாக கூறியுள்ளார். லஞ்சம் மேலும் அவர் அந்த பணத்தை கொடுக்க விரும்பாமல் திருச்சி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் செய்தார். இதனையடுத்து நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி முகமது இஸ்மாயில் ஊராட்சி செயலாளர் வெங்கட்ராமனை பார்க்க புத்தாநத்தம் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் அவர் அங்கு இல்லை. பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அவர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருப்பது தெரியவந்தது. அதன்பின் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்ற முகமது இஸ்மாயில் ஊராட்சி செயலாளர் வெங்கட்ராமனிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.6 ஆயிரம் லஞ்சப்பணத்தை கொடுத்துள்ளார். கைது அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து வெங்கட்ராமன் அலுவலகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். மேலும் அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் ஏராளமாக கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி செயலாளரை கைது செய்தனர். இந்த சம்பவம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜேஷ் கண்ணன் செய்தியாசிரியர்