வேலை நேரத்தில் மாற்றம்; அம்மா உணவகத்தை மூடும் திட்டமா...? போராட்ட களத்தில் ஊழியர்கள்.....

வேலை நேரத்தில் மாற்றம்; அம்மா உணவகத்தை மூடும் திட்டமா...?  போராட்ட களத்தில் ஊழியர்கள்.....

அம்மாஉணவகத்தைமூடவேண்டும்என்ற நோக்கத்தில் வேலை நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுப்பி நீலாங்கரையில் அம்மா உணவக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ஊழியர்கள் 25 பேர் பணிபுரிந்து வருகின்றனர் . இவர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் வேலைக்கு வர பணிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது ஒரு நாள் 12 பேரும் மற்றொரு நாள் 12 பேர் என்ற அடிப்படையில் பணிபுரியுமாறு மேலதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பாதி சம்பளம் தான் கிடைக்கும், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சுழற்சி முறை மாற்றமானது அனைத்து அம்மா உணவகங்ளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மாதம் 4,500 ரூபாய் சம்பளத்தில் ஒரு குடும்பத்தை எவ்வாறு நடத்த முடியும் என்றும், பாதி சம்பளத்தில் யார் வேலை செய்வார்கள் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

இது அம்மா உணவகத்தை மூட வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு என ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தினந்தோறும் பணிசெய்யும் நடைமுறைக்கே கொண்டு வரக்கோரி உணவக ஊழியர்கள் வலியுறுத்தினர்.

மேலும் அதிகாரிகளிடம் கடும் வாக்கு வாதம் செய்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அம்மா உணவக ஊழியர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.