பொய் வழக்குகளுக்கு அஞ்சமாட்டோம்: எடப்பாடி பழனிசாமி!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, தலைவாசலில் இன்று (அக்டோபர் 19) அதிமுக பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, தலைவாசலில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், சேலத்தில் 11 தொகுதிகளில், 10ல் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 90 சதவிகிதம் சேலத்தில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்கிய போது பல்வேறு சோதனைகளைச் சந்தித்தார். அவருக்கு எவ்வளவோ இடையூறுகளைக் கொடுத்தனர். அதையெல்லாம் முறியடித்து 11ஆண்டுக்காலம் ஆட்சி செய்தவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபட்டது. அதன் பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். இந்த இரு பெரும் தலைவர்களால் தான் தமிழகம் உயர்ந்தது. கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தவர் ஜெயலலிதா. அதனால் நாட்டில் கல்வியில் சிறந்த மாநிலமாகத் தமிழகம் உள்ளது.
7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் 435 பேர் மருத்துவம் படிக்கக் காரணமாக இருப்பது அதிமுக. அந்த திட்டத்தை திமுக விரிவுபடுத்தியது. திமுக தேர்தல் நேரத்தில் பொய்யான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்தது. அதில், 202 வாக்குறுதியை நிறைவேற்றியதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். நகைக்கடன் தள்ளுபடி செய்தது அதிமுக என்பதால், அதில் முறைகேடு என்று கூறி 53 கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளனர். இதன்மூலம் 5 சதவிகித பேர் கூட பயன்பெறமாட்டார்கள்.
அதிமுக ஆட்சியில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தினோம். ஆனால் இந்த 9 மாவட்டத்தில் திமுக ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தவில்லை. வெற்றிபெற்றவர்களைக் கூட தோல்வி அடைந்தவர்களாக அறிவித்துள்ளனர் என்பதைத் தேர்தல் ஆணையத்துக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். திமுகவினர் முறைகேடாக வெற்றி பெற்றுள்ளனர். அடுத்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுக இருக்காது என்றார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியை நிலைநாட்டினார். அம்மா மறைவுக்குப் பிறகு கட்சி இருக்காது என்று சொன்னார்கள். ஆனால் திமுகவின் கனவு கானல் நீராக போய்விட்டது. எந்த காலத்திலும் அதிமுகவை வீழ்த்த முடியாது.
5 மாதங்களாக மெகா தடுப்பூசி முகாம் என்ற பெயரில் மெகா பொய்பேசி வருகின்றார். அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போட்டு கழகத்தை உடைக்க பார்க்கிறார்கள். அது எப்போதும் முடியாது. கட்சி தொடங்கி 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்திலிருந்தது அதிமுக தான்.
அதிமுகவினரின் செயல்பாடுகளை தடுக்கத்தான் முன்னாள் அமைச்சர்கள் மீது நிர்வாகிகள்மீது வழக்குப் போடுகின்றனர். பொய்யான வழக்குகளைக் கண்டு அதிமுக அஞ்சாது என்று கூறினார்.