வேகம் எடுக்கும் ஓட்டு எண்ணிக்கை; படபடப்பில் வேட்பாளர்கள்.....

வேகம் எடுக்கும் ஓட்டு எண்ணிக்கை; படபடப்பில் வேட்பாளர்கள்.....

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 9 மாவட்டங்களில் தொடங்கியது.

அதிகாலை முதலே கட்சி தொண்டர்கள் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் குவியத் தொடங்கினார்கள். இந்த 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று மாலைக்குள் வெளியாகி விடும்.

அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குச்சீட்டுக்கள் பலத்த பாதுகாப்புடன் எண்ண தொடங்கப்பட்டுள்ளன.

9 மாவட்டங்களில் 145 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கும், 1,381 ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கும், 2,901 பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கும், 22,581 ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

மேலும் இந்த தேர்தலுடன் 28 மாவட்டங்களில் காலியாக இருந்த 130 பதவிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது.இதில் 3,346 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எனவே மீதம் உள்ள 24,116 பதவிகளுக்கு 80,819 பேர் வேட்பாளராக களம் இறங்கியுள்ளனர்.

அக்டோபர் 6ம் தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 77.43 சதவீத ஓட்டுகளும், அக்டோபர் 9ம் தேதி நடந்த தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. பதிவான வாக்குகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதன் ஓட்டு எண்ணிக்கை இன்று அக்.12ம் தேதி நடைபெறுகிறது.

இதற்காக 9 மாவட்டங்களில் 74 ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இந்த ஓட்டு எண்ணும் மையங்களை அமைத்து இருக்கிறார்கள். இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது.ஓட்டுச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதும் முதலாவதாக பெட்டிகள் உள்ள அறை சீல் உடைக்கப்பட்டு அங்கிருந்து ஓட்டு பெட்டிகளை பொதுக்கூடத்துக்கு எடுத்து வந்து வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் முன்னிலையில் பெட்டியில் உள்ள ஓட்டுகள் பெரிய பெட்டியில் கொட்டப்பட்டு 50-50 சீட்டுகளாக அடுக்கி வைத்து கட்டுவார்கள்.

மற்றொரு அறையில் வண்ணம் வாரியாக ஓட்டுச் சீட்டுக்கள் பிரிக்கப்படும். பின்னர் பிரிக்கப்பட்ட சீட்டுகளை 50-50 ஆக பிரித்து மீண்டும் கட்டுவார்கள். ஒவ்வொரு மையத்திலும் 4 பதவிகளுக்கும் ஓட்டுகளை எண்ணுவதற்கு தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அங்கு அந்த ஓட்டு சீட்டுக்கள் பதவிகள் வாரியாக கொண்டு செல்லப்படும். பின்னர் தான் ஒவ்வொருவருக்கும் கிடைத்த ஓட்டுக்கள் எண்ணும் பணி நடைபெறும்.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உறுப்பினர் பதவிக்கும், ஒன்றிய உறுப்பினர் பதவிக்கும் எண்ணி முடித்து முடிவுகள் அறிவிப்பதற்கே பிற்பகல் ஆகி விடும்.
பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கு முடிவுகள் ஒருசில மணி நேரத்திலேயே அந்த முடிவுகள் தெரிய வரும்.

காலை 10 மணியளவில் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு வெற்றி பெற்றவர்கள் விவரம் தெரியவரும். அடுத்த ஒரு மணி நேரத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றவர்களின் விவரங்களும் தெரியவரும்.