ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 6ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 6ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனைத்தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இதனிடையே சமீபத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வருகிற 13ஆம்தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் 9 புதிய மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வந்தாலும் இவற்றை உச்சநீதிமன்றம் விதித்த கால கெடுவுக்குள் நடத்தி முடிக்க சாத்தியமில்லாத சூழல் உருவாகி உள்ளது. எனவே தேர்தல் நடத்த மேலும் காலஅவகாசம் தேவை என்று அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,
பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், தி.மு.க. அரசு தரம் உயர்த்தி உள்ளதால் வார்டு வரையறை உள்ளிட்ட பணிகள் செய்ய வேண்டி இருக்கிறது. அந்தப் பணிகளை தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்து தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றார்.
முதல்வர் ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க அறிவுறுத்தி உள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது சம்பந்தமாக தெளிவான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 6ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் 6ஆம் தேதி திங்கட்கிழமையன்று நண்பகல் 12 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.