தோல்வியின் போது ஓடும் கோழைகள்: மகேந்திரன் ஒரு 'துரோகி'.. கமல் காட்டம்
தேர்தல் களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தனர் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் கமல், அப்படி துரோகிகளைக் களையெடுக்கும் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் மகேரந்தரன் என்றும் தோல்வியின்போது ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை என்றும் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தேர்தல் முடிவுகள், கட்சி கட்டமைப்பினை வலுப்படுத்துதல், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அக்கட்சியின் பல முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர். அக்கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ், பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், சந்தோஷ் பாபு, சிகே. குமரவேல் மவுரியா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
குறிப்பாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாகக் கட்சியிலிருந்தே விலகியுள்ளார். மேலும், தோல்விக்கு பிறகும் கமல்ஹாசன் தனது அணுகுமுறையிலிருந்து மாறுபட்டுச் செயல்படுவதாக தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் மாறிவிடுவார் என்ற நம்பிக்கையும் இல்லை என்றும் ராஜினாமாவுக்குப் பிறகு வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்,
இந்நிலையில் கமல்ஹாசன் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தனர் என்றும் துரோகிகளைக் களையெடுக்கும் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் மகேரந்தரன் என்றும் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சீரமைப்போம் தமிழகத்தை' எனும் பெருங்கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலைச் சந்தித்தோம். ஒரு பெரிய போரில் திறம்படச் செயல்பட்டோம்.
களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டோம். 'துரோகிகளைக் களையெடுங்கள்' என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக் களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் ஆர். மகேந்திரன். கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப்போகும் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் இவர்தான். முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக்கொள்ளத் துணிந்தார். கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த பல நல்லவர்களைத் தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை.
நேர்மை இல்லாதவர்களும் திறமை இல்லாதவர்களும் வெளியேறும்படி மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர் தன்னுடைய திறமையின்மையும், நேர்மையின்மையையும். தோல்வியையும் அடுத்தவர் மீது பழி போட்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார். தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகிக்கொண்டார். ஒரு களையே தன்னை களையென்று புரிந்துகொண்டு தன்னைத்தானே நீக்கிக்கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான்.
என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை. நான் செய்த தவறுகளை மறைக்கவோ, மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை. என் சகோதர சகோதரிகளான மக்கள் நீதி மய்யத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு மனம் தளர வேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை. உங்களின் வீரமும் தியாகமும் ஊர் அறிந்தவை, தோல்வியின் போது கூடாரத்தைப் பிய்த்துக்கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றமில்லை" என்று கமல் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.