விவசாயிகளுக்கு அடுத்த ஹேப்பி நியூஸ் - முதல்வர் பழனிசாமி!



ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூரில் திறந்த வேனில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசுகையில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் மிகுந்த பயன்பெறுவர். அதிமுக ஆட்சியில் தான் அதிகப்படியான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் தமிழகத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தமிழக அரசு சார்பில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ஆளுங்கட்சியை குறை கூறி வருகிறார். அவர் புதிதாக அறிமுகம் செய்து வைத்துள்ள திட்டத்தில் பெட்டியில் மனுக்களைப் போட வேண்டுமாம்.

நீங்கள் எப்போது முதல்வர் ஆவது, அந்தப் பெட்டியை உடைப்பது. ஸ்டாலினுக்கு நாட்டு நடப்பே தெரியவில்லை. தமிழகம் முழுவதும் முதல்வரின் குறைதீர்வு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இதில் பெறப்பட்ட 9.75 லட்சம் மனுக்களில் 5.25 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்கான ரசீது கொடுக்கப்படுகிறது.

ஆனால் ஸ்டாலின் கொடுக்கும் ரசீது செல்லாது என்பதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் மூன்று லட்சம் பேருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. அதில் இதுவரை 2.84 லட்சம் பேருக்கு வாகனம் கொடுக்கப்பட்டுள்ளது.

16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன் ரத்து செய்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 10 அல்லது 15 நாட்களில் கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்படும். தமிழக மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசு இது என்று தெரிவித்தார்.