8-ம் தேதி சசிகலா எடுக்க போகும் "பிரம்மாஸ்திரம்".. மிரண்டு கிடக்கும் "தலைகள்"! சீக்ரெட் பிளான்..

 8-ம் தேதி சசிகலா எடுக்க போகும் "பிரம்மாஸ்திரம்".. மிரண்டு கிடக்கும் "தலைகள்"!   சீக்ரெட் பிளான்..



ஒரு முடிவோடுதான் சசிகலா அரசியல் ஆட்டத்தை ஆட போகிறார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. 8-ம் தேதியில் இருந்தே அவரது அதிரடிகள் ஆரம்பமாகும் என்றும் உறுதியாக தெரிவிக்கிறார்கள். 7-ம் தேதி வருவதாக இருந்த சசிகலாவின் வருகை 8-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

 நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து வர வேண்டும் என்பது போன்ற ஒரு சில காரணங்களால் இந்த தேதி மாற்றப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், எப்போது வெளியே வந்தாலும் அன்றைய நாள் தமிழகத்தின் கவனம் மொத்தமும் தன்னை நோக்கியே திரும்பி இருக்க வேண்டும் என்பதில் கறாராக இருக்கிறாம் சசிகலா. அதுகுறித்து ஒரு சில தகவல்களும் கசிந்து வருகின்றன. 

முதலாவதாக, டிஸ்சார்ஜ் ஆகி சென்ற தினத்தன்று ஜெயலலிதாவின் காரையே, சென்னை வரும்போதும் பயன்படுத்தலாம் என்று உறவினர்கள் சொன்னார்களாம்.. அதற்கு சசிகலா, அந்த கார் வேண்டாம்.. அக்கா பிரச்சாரத்துக்கு செல்லும் பெரிய வேன் ஏற்பாடு செய்யும்படி சொன்னாராம்.. தொண்டர்கள் தன்னை எளிதாக பார்க்க வசதியாக இருக்கும் என்பதால், ஜெயலலிதாவின் பிரச்சார வேனை வேண்டும் என்று கேட்டாராம். 

அடுத்ததாக, அந்த வேனில் அதிமுக கொடி கட்டாயம் இருக்க வேண்டும் என்றாராம்.. டிஸ்சார்ஜ் ஆன அன்றும், இப்படித்தான் கொடியை மாட்டி வைத்து, இப்போது வரை அந்த விவகாரம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் அதிமுக கொடிதான் வேண்டும் என்றாராம் சசிகலா. 



டிஸ்சார்ஜ் ஆனபோது 2 விஷயங்களை சசிகலா தமிழகத்துக்கு சூசகமாக தெரியப்படுத்தி இருந்தார்.. ஒன்று ஜெயலலிதாவின் வாரிசு தான் என்பது, மற்றொன்று அதிமுகவின் தலைமையும் தான் தான் என்பது.. அதைதான் அந்த காரும், அந்த கொடியும் உணர்த்திய உண்மை.. இப்போதும் தன் உரிமையை விட்டுத்தர கூடாது என்பதலேயே அதிமுக கொடியை வேனில் பறக்க விட சொல்லி உள்ளாராம்.

 அடுத்ததாக, தன்னை வழிநெடுங்கும் வரவேற்கும் தொண்டர்களிடமும் அதேபோல கொடி இருக்க வேண்டும் என்கிறாராம்.. முக்கியமாக இரட்டை இலையை அவர்கள் தாங்கி இருக்க வேண்டும் என்றாராம்.. அதுமட்டுமல்ல, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், என பல்வேறு மாவட்டங்களை கடந்துதான் அன்றைய சசிகலாவின் பயண ரூட் உள்ளது.. இதில் 2, 3 இடங்கள் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் உள்ள மாவட்டங்கள் என்பதால், அவர்களிடம் சற்று நேரம் பயணத்தின் இடைவெளியில் பேசவும் ஒரு பிளான் வைத்திருக்கிறாராம்..

அதுமட்டுமல்ல, வழியில் ஒருசில முக்கியமான இடங்களில் அதிமுக கொடியையும் ஏற்றி வைக்க போகிறாராம். கார் கொடி இதெல்லாம் யூகத்தின் அடிப்படையில் வெளிவரும் தகவல்கள் என்றாலும், அதிமுக கொடியை காரில் கட்டிவிடும்போதே பிரச்சனை வெடித்து கிளம்பும் என்று தெரிகிறது.. இந்த கொடியை பயன்படுத்துவதில் பலவித மாறுபட்ட கருத்துக்கள் எழுந்தபடியே உள்ளன..

 இதை பற்றி சில அமமுக பிரமுகர்கள் சொல்லும்போது, "அது என்ன தேசிய கொடியா? யார் வேண்டுமானாலும் அதிமுக கொடியை காரில் கட்டலாமே? எத்தனையோ பேர் காரில் கட்டிக் கொண்டு போகிறார்கள்.. அவர்களை எல்லாம் போலீசார் மடக்கி, நீ யாரு? அதிமுககாரனா? என்று விசாரித்து கொண்டா இருக்கிறார்கள்? சசிகலாவுக்கு அதிமுக கொடியை பயன்படுத்த முழு உரிமை இருக்கிறது.. சட்டப்படியும் இருக்கிறது" என்றார்கள்.

 இதெல்லாம் தெரிந்துதான் அதிமுக அமைச்சர்கள் சிலர், டிஜிபியை பார்த்து புகார் தந்திருக்கிறார்கள்.. இதையும் அரசியல் நோக்கர்கள் தவறு என்கிறார்கள்.. இது முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சனை.. இது சிவில் சம்பந்தப்பட்டது.. ஏன் போலீசுக்கு போகணும்? இது என்ன கிரைம் விவகாரமா? நேராக கோர்ட்டுக்கு போய், கொடியை பயன்படுத்துவது சம்பந்தமாக ஸ்டே வாங்கியிருக்க வேண்டியதுதானே? சட்டம் தெரிந்து அனுபவம் வாய்ந்த சிவி சண்முகமே இதை செய்வது ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார்கள்.

ஆனால், இதுவும் ஒரு காரணமாகத்தான் அதிமுக காய் நகர்த்துகிறதாம்.. "அதிமுக கொடியுடன் தமிழக எல்லையில் சசிகலாவின் கார் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சிவி சண்முகம் தெரிவித்திருந்த நிலையில், இப்போது போலீசில் புகாரும் தந்திருக்கும் நிலையில், 8-ம் தேதி காரில் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தி வந்தால், நடவடிக்கை எடுக்கவும், வழக்கு தொடுக்கவும் சாதகமாக இருக்கும் என்பதால்தான் புகார் தரப்பட்டுள்ளது என்கிறார்கள்.

இப்படி 8-ம் தேதியை மையப்படுத்தியே பலவித யூகங்கள், பலதரப்பட்ட கருத்துக்கள் வலம்வந்த படியே உள்ளன.. இதில் எது நடக்க போகிறது? சசிகலாவின் என்ட்ரி எப்படி இருக்க போகிறது? அதிமுக எப்படி அதை எதிர்கொள்ள போகிறது என்பது பெரிய சஸ்பென்ஸ்தான்..!