இன்னும் ஒரு வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் : ஒப்புதல் அளித்த பெற்றோர்கள்!
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட பள்ளிகளை நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக, பள்ளி, கல்லூரிகளை தற்போது திறக்க கூடாது என்றும், ஏற்கனவே பள்ளிகளை திறந்த மாநிலங்களில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை சுட்டிக் காட்டியும், அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்திய தமிழக அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைத்தது. இதனிடையே, அடுத்த கட்ட பொது முடக்கத்தை தளர்வுகளுடன் அறிவித்த தமிழக அரசு, கல்லூரி இளங்கலை இறுதி வகுப்புகளை டிசம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி அளித்தது. அதன்படி கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
அதேசமயம், கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வருவதால், பாதுகாப்பு வழிமுறைகளை சரிவர கடைபிடித்து பள்ளிகளைத் திறக்கலாம் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, டிசம்பர் மாதம் வழக்கமாக நடத்தப்படும் அரையாண்டு தேர்வு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகள் பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றார்.