2020ல் உலகை உலுக்கிய சம்பவங்கள்!
2020ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்டது. இந்த ஆண்டு முழுவதும் கொரோனா வைரஸ் உலக மக்களை வீட்டுக்குள் அடைத்து, பலரது வேலைவாய்ப்புகளை பறித்து, நிதி நெருக்கடியில் தள்ளியது. 2020 ஏராளமானோர் வெறுத்த ஒரு ஆண்டு எனவே கூறலாம். இதில், கொரோனா போக உலகை உலுக்கிய இதர சம்பவங்களும் இருக்கின்றன. அவற்றை பார்க்கலாம்.
கோபி பிரயண்ட் மரணம்
![](https://static.langimg.com/thumb/msid-79762492,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பேஸ்கட்பால் விளையாட்டு வீரரான கோபி பிரயண்ட் கடந்த ஜனவரி 26ஆம் தேதியன்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரது 13 வயது மகளும் இந்த விபத்தில் உயிரிழந்தார். உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்தனர்.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்
![](https://static.langimg.com/thumb/msid-79762491,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் கடந்த மே மாதம் போலீஸ் காவலில் வைத்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை கண்டித்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதனால், இனவாதத்துக்கு எதிராகவும், இன பாகுபாடுகளுக்கு எதிராகவும் உலகளவில் விவாதங்கள் எழுந்தன.
பெய்ரூட் வெடிப்பு
![](https://static.langimg.com/thumb/msid-79762490,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டு 190 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணகானோர் படுகாயமடைந்தனர். இதுமட்டுமல்லாமல், ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது.
ஆஸ்திரேலிய காட்டுத்தீ
![](https://static.langimg.com/thumb/msid-79762489,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
ஆஸ்திரேலியாவில் உள்ள புதர்காடுகளில் 2019ஆம் ஆண்டு இறுதியில் காட்டுத்தீ பரவத் தொடங்கியது. ஆனால், 2020ஆம் ஆண்டு மே மாதம் வரை தொடர்ந்து நீடித்தது. இந்த நீண்ட காட்டுத்தீயால் 33 பேர் உயிரிழந்துள்ளனர், பல கோடிக்கணக்கான விலங்குகள் உயிரிழந்துள்ளன. மேலும், ஏராளமான வீடுகள் சேதமடைந்து, பல லட்சம் ஹெக்டேர் நிலம் எரிந்து சாம்பலானது.
டெல்லி கலவரம்
![](https://static.langimg.com/thumb/msid-79762493,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
இந்தாண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவின் தலைநகரமான டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் மதக் கலவரம் ஏற்பட்டது. இதற்கு உலகளவிலான ஊடக கவனம் கிடைத்தது. சர்வதேச ஊடக நிறுவனங்கள் மோடி அரசை கடுமையாக விமர்சித்தன. சிஏஏ சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 53 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க தேர்தல்
![](https://static.langimg.com/thumb/msid-79762488,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
நவம்பர் 3ஆம் தேதியன்று அமெரிக்க தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். ட்ரம்ப் தொடுத்த வழக்குகளை அனைத்து நீதிமன்றங்களும் நிராகரித்துவிட்டன. ஜோ பைடன் வெற்றிபெற்றுவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது.
கோவிட்-19 தடுப்பூசி
![-19- -19-](https://static.langimg.com/thumb/msid-79762487,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க 2021ஆம் ஆண்டு வரை ஆகும் என உலக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசிகள் அனைத்து சோதனைகளிலும் வெற்றிபெற்றுள்ளது. மேலும், ஃபைசர் தடுப்பூசி ஏற்கெனவே இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.