மோடியின் ஆட்சியில் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன் - இஸ்லாமிய பெண் திருமதி TP.சல்பத் பேட்டி ...

 மோடியின் ஆட்சியில் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன் - இஸ்லாமிய பெண் திருமதி TP.சல்பத் பேட்டி ...



கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இருக்கிறது வாண்டூர் கிராம  பஞ்சாயத்து. அங்கு T.P.சல்பத் என்ற இஸ்லாமிய பெண்,  பாஜக வேட்பாளராக களத்தில் உள்ளார்.   அவர் ஆர்கனைசர்  என்ற ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "நான் பிரதமர் மோடியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன்",  "மோடியின் திட்டங்களால் பெண்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை கண்கூடாக கண்டுள்ளேன்", "பாரதப் பிரதமர் மோடியின் ஆட்சியில் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன்" என்று கூறினார்.  மேலும், "மோடியுடன் ஒரு செல்ஃபி  எடுத்துக்  கொள்வதே என் லட்சியம்" என்றும் உணர்ச்சி பொங்க கூறுகிறார்.  முழு பேட்டியில் மொழியாக்கம் இதோ உங்களுக்காக ⬇️
Q: இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள வாண்டூர் கிராம  பஞ்சாயத்தில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறீர்கள். உங்களுக்கு இந்த ஆர்வம் வந்தது எப்படி?
⏩ இது எனது முதல் தேர்தல் களம்.  நான் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர்.  மத்தியில் உள்ள பாஜக அரசு இந்திய மக்களின் வளர்ச்சிக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  பாஜக வேட்பாளராக களத்தில் இறங்கி செயல்படுவதன் மூலம், அந்த நலத்திட்டத்தின் பலன்களை பொதுமக்களுக்கு எடுத்துச்செல்ல முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
Q: உங்களுக்கு பாஜக சில சலுகைகளை அளித்துதான் வேட்பாளர் ஆக்கியதாக  சில வதந்திகள் உள்ளதே?
⏩ எங்கள் குடும்பம் வாண்டூர் பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வருகிறது.  நாங்கள் பரம்பரை செல்வந்தர்கள். எனவே சலுகைகளையும், பதவிகளையும் காட்டி என்னை ஒரு கட்சியில் இணைப்பது என்பது சாத்தியமான விஷயம் அல்ல. என்னுடைய சொந்த விருப்பத்தின் மட்டுமே நான் பாஜகவில் இணைத்துள்ளேன்.  முழு முயற்சியுடன் களப்பணி செய்து இந்த தேர்தலில் நான் வெற்றி பெறுவேன்.
Q: பிரதமர் நரேந்திர மோடியால் ஈர்க்கப்பட்டதன் காரணம் என்ன?
⏩ நரேந்திர மோடி ஒரு நேர்மையான அரசியல்வாதி.  ஜாதி, இனம், மொழி, மதம் குறித்த பாகுபாடு இல்லாமல், இந்திய தேசத்தின் முன்னேற்றத்திற்காக அயராமல் உழைப்பவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.  அனைத்துக்கும் மேலாக, முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்றியதற்காக நரேந்திர மோடியை மிகவும் பாராட்டுகிறேன். இதனால்தான் நான் மோடியை மிகவும் விரும்புகிறேன். மேலும் பெண்களின் திருமண வயதை 21 ஆக மோடி அவர்கள் உயர்த்த உள்ளார்.  இந்த இரண்டு சீர்திருத்தங்களும் இஸ்லாமிய பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இவை இரண்டும் இஸ்லாமியப் பெண்களுக்கு இது நாள் வரை இல்லாத உரிமையை வழங்கியுள்ளது. பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மேலும் உயர்த்தி 25 ஆக மாற்ற வேண்டும் வேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து.
Q: பெண்களின் திருமண வயது 21 என்ற அறிவிப்பால் பிஜேபி யின் பால் ஈர்க்கப்பட்டதாக  கூறும் நீங்கள், வேறு ஏதேனும் சிறப்பான காரணங்கள் கூற முடியுமா?
⏩ ஆமாம், நான் 15 வயதில் திருமணம் செய்து கொண்டேன். எனது பல நண்பர்களும் கூட 14, 15 மற்றும் 16 வயதுகளிலேயே திருமணம் புரிந்து கொண்டனர். அந்த வயதில் நாங்கள், எங்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாத, பள்ளி படிப்பு படித்து கொண்டிருக்கும் சிறுமிகள். என்னை பொறுத்தவரை பெண்கள், உயர் கல்வி, வேலை வாய்ப்புகள் போன்றவற்றை பெற்றபின் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
Q: நீங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதேனும் எதிர்ப்புகள் உண்டா?
⏩ நான் ஏற்கனவே கூறியது போல் நாங்கள் தலைமுறை, தலைமுறையாக மலப்புரத்தில் வாழ்ந்து வரும் கௌரவமான குடும்பம். மேலும் எனக்கு நான்கு சகோதரர்கள் அவர்கள் நால்வரும் கம்யூனிஸ்ட் அல்லது காங்கிரசில் இருப்பவர்கள்.  யாருமே பாஜக ஆதரவாளர்கள் இல்லை. அவர்கள் என்னை காங்கிரஸ்  அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தேர்தலில் நிற்கலாம் என்று அறிவுரை கூறினார்.  என் தந்தை எனக்கு முழு சுதந்திரம் அளித்திருந்தார்.   எந்த ஒரு விவகாரத்திலும் இப்படித்தான் நான் நடக்க வேண்டும் என்னை அவர் வற்புறுத்தியது கிடையாது.  சிறுவயது முதலே சுதந்திரமாகவே வளர்ந்ததால் எனக்கு பிடித்த கட்சியை தேர்ந்தெடுத்தேன்.  முதலில் வேறு கட்சியில் இணையுமாறு யோசனை கூறினாலும், யாரும் என்னை அதிகமாக வற்புறுத்தவில்லை.
Q: உங்கள் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர் பற்றி?
⏩ என் கணவர் மற்றும் என் குழந்தைகள் எனக்கு இந்த விஷயத்தில் ஆதரவாகவும் பலமாகவும் உள்ளனர்.
Q: என்ன மாதிரியான அதிர்வுகள் தேர்தல் களத்திலிருந்து  வருகின்றன? 
⏩ மீண்டும் அதே தான், நான் ஒரு பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வருவதால், எனக்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஆதரவு கரங்கள் தான். இதை பார்க்கும்போது, பெருவாரியான வாக்குகளில் வெற்றி பெறுவேன் என எண்ணுகிறேன். என்றாலும் ஒன்றை நான் உறுதி படுத்த முடியும், வெற்றியோ தோல்வியோ, நான் பிரதமர் மோடிக்காக  இந்த யுத்த களத்தில் இருக்கிறேன். அவர் இந்த தேசத்துக்கு செய்த  பணிக்காக மற்றும் முக்கியமாக, இஸ்லாம் பெண்களுக்கு செய்த பணிக்காகவே நான் அவருடன் இணைந்து வெற்றிக்காக போராடுவேன். முஸ்லீம் பெண்கள் அரனுடனும், பாதுகாப்புடனும் பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் உள்ளோம்.
Q: நாட்டு மக்களுக்காக உங்கள்  செய்தி  என்ன?
⏩ பிஜேபி-யின் வேட்பாளரான பின்பு, கேரளா முழுவதும் என் மேல் ஆர்வம் காட்டுகின்றனர், கேரள தொலைக்காட்சிகள் என்னை நேர்முகம் செய்கின்றனர், இதன் மூலம் ஒரு தெளிவான செய்தியை, கேரள மக்களுக்கும் மற்றும் தேசத்திற்கும் சொல்ல விரும்புகிறேன், நான் ஏன் ஒரு முஸ்லீம் வேட்பாளராக பிஜேபி-யில் உள்ளேன், என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.  இஸ்லாமிய பெண்கள், இந்த நாட்டிலே உயர்ந்த நிலைக்கு வந்துள்ளது எல்லாம் மோடியின் கொள்கைகள் மற்றும் நலத்திட்டங்களால் மட்டுமே. ஒவ்வொரு முஸ்லீம் பெண்ணும் பிஜேபி-ஐ ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.
- பத்மநாபன் நாகராஜன்