டிசம்பர் மாதம் அனைவருக்கும் இலவசம்; ...!

 

டிசம்பர் மாதம் அனைவருக்கும் இலவசம்...!

கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதையொட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு சிறப்பு நிவாரணத் திட்டத்தை மாநில அரசு அறிவித்தது. அதன்படி ஏப்ரல் மாதம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்
இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. அதில் அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவை அடங்கும். மேலும் 1,000 ரூபாய் ரொக்கமும் அளிக்கப்பட்டது. இந்த அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன்கள் வழங்கப்பட்டன.

  • அதில் பொருட்கள் வழங்கப்படும் நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிட்டிருக்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இத்தகைய டோக்கன் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதே நடைமுறை அதற்கடுத்த மாதங்களிலும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்க டோக்கன் விநியோகம் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதாவது நாளை (நவம்பர் 29) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கப்படுகிறது. வரும் டிசம்பர் 2, 3, 5 ஆகிய தேதிகளில் PHH மற்றும் AAY ரேஷன் அட்டைதாரர்களும், 7, 8 , 9, 10 ஆகிய தேதிகளில் NPHH அட்டைதாரர்களும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் டோக்கன் வழங்கப்படவுள்ளது.

நாளொன்றுக்கு 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் டோக்கன்கள் வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் ரேஷன் கடைகளுக்குச் சென்று போதிய சரீர இடைவெளி விட்டு பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.


ஒரு குடும்பத்திற்கு ஒருவர் மட்டுமே பொருட்கள் வாங்க வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. PHH மற்றும் AAY ரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்புக்கு பதில் 5 கிலோ முழு கொண்டைக்கடலை உடன் மற்ற பொருட்கள் வழங்கப்படும். NPHH அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ துவரம் பருப்பை இலவசமாகவும், மற்ற பொருட்களை வழக்கம் போலவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.