மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு திருட்டு சைக்கிளில் ஊர் திரும்பிய தொழிலாளி

மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு திருட்டு சைக்கிளில் ஊர் திரும்பிய தொழிலாளி


ஜெய்பூர்: ராஜஸ்தானில் வேலைப்பார்த்து வந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர், சைக்கிள் உரிமையாளருக்கு மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் சைக்கிளை திருடிக்கொண்டு 250 கி.மீ கடந்து சொந்த ஊர் திரும்பிய சம்பவம் நடந்துள்ளது.


கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக போடப்பட்டுள்ள ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சிறப்பு ரயில், பேருந்து வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், தனிமைப்படுத்திவிடுவார்கள் என அஞ்சி கால்நடையாக சொந்த ஊர் திரும்புவது தொடர்கிறது.

சிலர் சைக்கிளில் பல நூறு கிலோ மீட்டர் கடந்து வீட்டை அடைகிறார்கள். நாட்டில் முதல் முறையாக நகரத்திலிருந்து கிராமத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக புலம்பெயர்கிறார்கள்.

இந்த நிலையில் ராஜஸ்தானில் வேலைப்பார்த்து வந்த புலம்பெயர் தொழிலாளி முகமது இக்பால் என்பவர், பாரத்பூர் மாவட்டம் ராரா கிராமத்தில் சாஹாப் சிங் என்பவரது வீட்டில் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிக் கொண்டு 250 கி.மீ தொலைவில் உள்ள சொந்த ஊரான உ.பி மாநிலம் பரேலிக்கு சென்றுள்ளார்.


சைக்கிள் உரிமையாளருக்கு அவர் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அது புலம் தொழிலாளர்களின் அவல நிலையை காட்டுவதாக உள்ளது. அக்கடிதத்தில், “நான் உங்கள் குற்றவாளி. ஆனால், நான் ஒரு தொழிலாளி, மேலும் உதவியற்றவன். நான் உங்கள் சைக்கிளை எடுத்துக்கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். நான் சொந்த ஊரை அடைய வேறு வழியில்லை, எனக்கு ஒரு சிறப்பு திறன் கொண்ட குழந்தை உள்ளது. நான் பரேலிக்கு செல்ல வேண்டும்.” என கூறியுள்ளார்