இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது - அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி

இனி  எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது -  அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் என இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று காலை அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 25-ம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் எவ்வித மாற்றமும் இல்லை. 

அதிமுக தலைவர்கள் அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் குறித்து  தமிழக பாஜக தலைமை  உண்மைக்கு புறம்பாக பேசி, அவதூறாக விமர்சனம் செய்து வருவது, 2 கோடி அதிமுக தொண்டர்களிடையே  கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.  

அதிமுக - பாஜக இடையே கூட்டணி கிடையாது என அறிவித்த பிறகு, ஊடகங்களில், அரசியல் விமர்சகர்கள், ஊடகவிலாளர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், தவறான கருத்துக்களை தெரிவித்து வருவது ஏற்புடையது அல்ல. 

நாடாளுமன்ற, சட்டமன்ற தோ்தல்கள் என இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதை திட்டவட்டமாக அதிமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, ஊடகங்களில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என விமர்சனம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஆதாயத்திற்காக ஊடகங்களில் விமர்சனம் செய்ததாக கருத வேண்டி இருக்கும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  

மேலும், அதிமுக - பாஜக கூட்டணி இல்லை என்பது நாடகம் என முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர்.

 இந்த கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது திமுகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பயத்தில் பேசி வருகின்றனர். 

தற்போது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை தக்க வைத்துக் கொள்ள, கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களிடம் பேசி வருகின்றனர். 

 'இண்டியா' கூட்டணிக்கு இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை. இதே போல், ஒரிசாவில் பிஜிதளம், ஆந்திராவில் உள்ள 2 கட்சிகள் பிரதமர் வேட்பாளரை  முன்னிறுத்தாமலே நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவில்லையா...? 

தமிழக மக்களின் நலன், உரிமைகள் சார்ந்தே  2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை அதிமுக பொது செயலாளர் பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் சந்திப்போம். 

ஏற்கனவே 2014-ம் ஆண்டு காவிரியில் தண்ணீர் பெறுவது தொடர்பாக அதிமுக எம்பிக்கள் 22 நாட்கள், நாடாளுமன்றத்தை செயல்படாமல் முடக்கினோம் என்பது குறிப்பிடதக்கது. எனவே 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தி சந்திப்போம். 

அதிமுக கூட்டணியில் வலுவான கூட்டணி அமையும். இந்த கூட்டணியில் எந்த  கட்சிகள் இணையும் என்பதை காலம் தான் முடிவு செய்யும். 

தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது.  மேலும், 9 ஆண்டுகால பாஜக ஆட்சியின் நிறை, குறைகள் குறித்து பேசுவோம். இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.  

இந்நிகழ்வின் போது, அதிமுக எம்எல்ஏக்கள் கிருஷ்ணகிரி அசோக்குமார், ஊத்தங்கரை தமிழ்செல்வம், முன்னாள் எம் எல்-ஏக்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனி வெங்கடப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

K. MOORTHY. Reporter Krishnagiri